Exclusive: என் அடுத்தப்படமும் உண்மை கதை தான்... தீர்க்கமாக சொல்கிறார் மாரி செல்வராஜ்!
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜின் சிறப்பு பேட்டி.
சென்னை: தனது அடுத்தப்படமும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாக தான் இருக்கும் என பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் மாரி செல்வராஜை ஒன்இந்தியாவிற்காக சந்தித்தேன். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், தனது அடுத்தப்படம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
அவர் அளித்த பேட்டியில் இருந்து...

பரியனின் வெற்றி
"பரியேறும் பெருமாளின் வெற்றி, நேர்மையான, நியாயமான படைப்புகள் நிச்சயம் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. சர்ச்சையான கதைகளை எடுத்தாலும் கூட, சினிமாவுக்கு சமரசம் செய்து கொள்ளாமல், நேர்மையாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

திட்டமிட்டு எதையும் தினிக்கவில்லை
பரியேறும் பெருமாள் படத்தின் கதையில் நான் திட்டமிட்டு எதுவும் தினிக்கவில்லை. நிஜம்தான் என்னை கூட்டிச்சென்றது. பரியேறும் பெருமாள் தானாகவே தன்னை உருவாக்கிக்கொண்டது.

வெள்ளந்தி மனிதர்களின் பிரதிபலிப்பு
நமது சமூகத்தில் உள்ள பல வெள்ளந்தி மனிதர்களின் பிரதிபலிப்பு தான் பரியேறும் பெருமாள் கேரக்டர். என்னை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதினேன். அதனால் தான் இது உண்மையாக இருக்கிறது.

எளிய மனிதர்கள்
படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் எல்லாமே நிஜத்தில் உள்ள எளிய மனிதர்கள் தான். நான் பார்த்த, படித்த மனிதர்களை தான் படத்தில் கொண்டுவந்துள்ளேன்.

உலக திரைப்பட விழாக்கள்
இந்த படத்தை உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் என் எண்ணம். ஆனால் சில காரணங்களால் அது சாத்தியப்படவில்லை. தற்போது சில திரைப்பட விழாக்களுக்கு இதை அனுப்பி இருக்கிறோம்.

உண்மை கதை
நாம் என்ன படம் எடுத்தாலும் அதில் நேர்மையும், உண்மையும் இருக்க வேண்டும். அது தான் முக்கியம். என் அடுத்த படமும் உண்மை கதையாக தான் இருக்கும். பரியேறும் பெருமாள் என்னை எங்கு கூட்டி செல்கிறது என்பதை அறிய ஆசையாக இருக்கிறேன்", என்கிறார் மாரி செல்வராஜ்.


Click it and Unblock the Notifications











