அப்படி பேசவில்லை ஐயா.. மன்னித்துவிடுங்கள்.. மேடையில் பார்த்திபனிடம் உருகிய மிஷ்கின்
சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் மேடையில் வைத்து பார்த்திபனிடம் மிஷ்கின் மன்னிப்பு கேட்டார்.
வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்ற வரிசையில் இணைந்தார்.

வித்தியாச மிஷ்கின்: அஞ்சாதே படத்துக்கு பிறகு அவரது இயக்கத்தில் வெளியான நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ, துப்பறிவாளன் போன்ற படங்கள் கோலிவுட்டில் கவனம் ஈர்த்தவை. இவற்றில் முகமூடி படம் மட்டும் படுதோல்வியை சந்தித்தது. அவற்றை தவிர்த்து மற்ற படங்கள் ஒன்றும் சூப்பர் ஹிட் இல்லை ஆவரேஜ் ஹிட் என்ற நிலையில் இருப்பவை. குறிப்பாக அவர் இயக்கிய பிசாசு திரைப்படம் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்: பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கும் அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே சவரக்கத்தி படத்தின் மூலம் முழு நேர நடிகராகவும் அறிமுகமான மிஷ்கின் தொடர்ந்து லியோ, மாவீரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இரண்டு படங்களிலுமே மிஷ்கினின் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. இந்தச் சூழலில் இயக்குநர் விக்ரமனின் மகன் ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அந்தப் படம் சம்பந்தமான விழா சென்னையில் நடந்தது.
மன்னிப்பு கேட்ட மிஷ்கின்: இதில் பார்த்திபன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பார்த்திபனிடம் மிஷ்கின் மன்னிப்பு கேட்டார். அவர் பேசுகையில் "இயக்குநர் பார்த்திபன் மீது எப்போதுமே எனக்கு தனி மரியாதையும், மதிப்பும் இருக்கிறது. அவரைப் பற்றி நான் தவறாக பேசினேன் என்று சிலர் கூறுகிறார்கள். அது ஏற்புடையது இல்லை. நான் அவரை பொதுவெளியில் எப்போதும் அப்படி பேசியது கிடையாது.
தனியறையில்: நான் தனியறையில் இருக்கும்போது இளையராஜாவையும், மணிரத்னத்தையும் விமர்சிக்கும் உரிமை என்னிடம் இருக்கிறது. நமது வீட்டில் எல்லோருமே பண்ணுவதுதான் அது. நான் பார்த்திபன் சாரை பற்றி என்ன பேசினேன் என்று தெரியவில்லை. அவரது புதிய பாதை எப்போதுமே எனக்கு கோயில்தான். நீங்களும் எனக்கு ஒரு கடவுள்தான் பார்த்திபன் ஐயா. ஒருவேளை நான் தெரியாமல் பேசியிருந்தால் இங்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மனிதனைப் பற்றி இன்னொரு மனிதனிடம் சொல்பவர் ஒரு கோழை. அவரை நம்பாதீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











