கமல், தனுஷ் மாதிரி நான் இல்லை.. ஓபனாக போட்டுடைத்த மிஷ்கின்.. என்ன சொன்னாரு?
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். இப்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் படத்தை இயக்கியிருக்கும் அவர்; நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். தமிழில் மட்டும் இத்தனை நாட்கள் நடித்த அவர் மலையாளத்திலும் அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சித்திரம் பேசுதடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ என தனித்துவமான படங்களை இயக்கினார். அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புது அனுபவத்தை கொடுத்ததன் காரணமாக தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் அவரை சேர்த்தார்கள் ரசிகர்கள்.

இயக்குநராக இப்போதைய படம்: பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துவிட்டாலும்; அந்தப் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரை வைத்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ட்ரெய்ன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படமும் கண்டிப்பாக ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. பெரிய ஹைப்பை இப்படம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகராக மிஷ்கின்: இதற்கிடையே இயக்கம் மட்டுமின்றி பாடல்களையும் சிறப்பாக பாடும் திறமையை கொண்டிருக்கும் மிஷ்கின்; நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். மாவீரன், லியோ, வணங்கான், டிராகன் என எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த டிராகன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நடிகராக அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. இயக்குநராக வென்றது மாதிரியே நடிகராகவும் தனது தடத்தை ஆழமாக பதித்துவருகிறார். நடிகராக பிஸியாக இருக்கும் அவர் கீர்த்தி சுரேஷ் லீடு ரோலில் நடித்திருக்கும் ஒரு படத்தில் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கிறார். மேலும் மலையாளத்திலும் அறிமுகமாகிறார்.
மிஷ்கின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு மிஷ்கின் கொடுத்த பேட்டியில், " நான் கேமராவுக்கு பின்னால் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா ஆகிய இரண்டு படங்களை பார்க்கக்கூட மக்களுக்கு நேரமில்லை. ஒன்றிரண்டு நாட்கள்தான் அந்தப் படம் ஓடின. அஷ்வத் நேற்று எனக்கு ஃபோன் செய்து பேசினார். இப்போது ரொம்பவே தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன். சிலர் என்னை அழைத்து சென்று ஒன்றிரண்டு சீன்களில் மட்டும் நடிக்க வைக்கிறார்கள். இப்போது அப்படி நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
முன்பெல்லாம் நோ சொல்ல தயங்குவேன். இப்போது சொல்லிவிடுகிறேன். நடுவில் நான் மூன்று மாதங்கள் நடிக்கவில்லை. எழுத தொடங்கிவிட்டேன். காலம் எதையோ எழுதுது நாமும் அதோடு சேர்ந்து போகலாம் என நினைக்கிறேன். நான் கிரேட் ஆக்டர் இல்லை. ஒரு டீசன்ட் நடிகர். கமல், தனுஷ் மாதிரி இல்லை. மற்றவர்கள் என்ன கேட்கிறார்களோ அதை என்னால் ஒரு நடிகராக கொடுக்க முடியும்" என்றார்.


Click it and Unblock the Notifications
