மிஷ்கின் பேசினால் தான் அடுத்த நகர்வு குறித்து யோசிக்க முடியும்... மைத்ரேயா திட்டவட்டம்!
மிஷ்கினுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றது ஏன் என நடிகர் மைத்ரேயா விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை : மிஷ்கின் பேசினால் தான் அடுத்த நகர்வு குறித்து யோசிக்க முடியும் என நடிகர் மைத்ரேயா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தன்னிடம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி செயல்படாமல், இயக்குனர் மிஷ்கின் ஏமாற்றிவிட்டதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் நடிகர் மைத்ரேயா. இவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், க்ரைம் திரில்லர் படங்களை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை போட்டது.

இந்நிலையில் நடிகர் மைத்ரேயா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தான் ஏன் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறித்து விளக்கமளித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
"என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதற்காக கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கினுடன் எனது தந்தை ஒப்பந்தம் செய்தார். இதற்காக ரூ.1 கோடி முன்பணம் கொடுத்தோம். துப்பறிவாளன் படத்தை முடித்து விட்டு எனுது படத்தை இயக்குவதாக உறுதியளித்தார். ஆனால் அப்படி செய்யவில்லை.
இந்நிலையில் எனக்கு கூறப்பட்ட கதையில் உதயநிதியை வைத்து படம் எடுப்பதாக செய்தியில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதையடுத்து மிஷ்கினை சந்தித்து பேச நானும், எனது தந்தையும் முயற்சித்தோம். ஆனால் அவர் சந்திக்க மறுத்துவிட்டார்.
எவ்வளோ முயற்சி செய்யும் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து சில நாட்களுக்கு முன் மும்பை விமான நிலையத்தில் நடிகர் விஷாலை பார்த்தேன். மிஷ்கின் உடனும், உதயநிதியுடனும் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண உதவுவதாகக் கூறினார்.
ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விஷாலை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இதையடுத்து தான் நீதிமன்றத்துக்கு சென்று தடை உத்தரவு பெற்றோம். எனது தந்தை 150 படங்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறார். பல படங்களில் பணம் திரும்ப வரவில்லை என்றாலும் கூட இதுவரை ஒரு படத்துக்குக்கூட தடைபோட்டது கிடையாது.
ஆனால் எனது முதல் படத்துக்கே இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டதே என மனவேதனையில் இருக்கிறேன். ஏனென்றால் மிஷ்கின் சார் மீது நாங்கள் அளவுகடந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறோம். பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் வரை சென்று தடைபெற வைத்துவிட்டார்.
இது எனது முதல் செய்தியாளர் சந்திப்பு. எனது முதல் படத்துக்காக பிரமாண்ட விழாவாக இது இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் இப்படி ஒரு சூழலில் எனது செய்தியாளர் சந்திப்பு அமையும் என நினைக்கவில்லை.
எனக்கு சொன்ன கதையை தான் இப்போது அவர் வேறு ஆட்களை வைத்து எடுக்கிறார். எனக்கு சொன்னதும் சைக்கோ கதைதான். இப்போது எடுக்கும் படமும் பார்வையற்ற நாயகன் கதை என்று தான் கேள்விப்பட்டேன்.
இப்போதைய நிலையில், அவர் க்ரைம் திரில்லர் படத்தை வெளியிட தடைபெற்றுள்ளோம். மிஷ்கின் பேசினால் தான் அடுத்த நகர்வு குறித்து யோசிக்க முடியும். ஜி.என்.ஆர் குமரவேலனுடன் ஒரு படம் ஒப்பந்தம் செய்துள்ளோம்".
இவ்வாறு நடிகர் மைத்ரேயா கூறினார்.


Click it and Unblock the Notifications











