Rajinikanth - பெரியவர் ரஜினியின் பேச்சை சீரியஸா எடுத்துக்காதீங்க... மிஷ்கின் ஓபன் டாக்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினி பேசியதை சீரியஸாக எடுத்துக்கொண்டு ரசிகர்கள் சண்டை போடக்கூடாது என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய்யும் நடித்திருக்கின்றனர். ரஜினியின் இரண்டு படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததாலும், விஜய்யின் படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலிப்பதாக கூறப்படுவதாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.

பாடல் வரிகள்: இந்தக் குரல்களால் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் புகைய ஆரம்பித்தது. இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலரிலிருந்து வெளியான ஹுக்கும் என்ற பாடல் வரிகள் அந்தப் புகையை தீயாக மாற்றியது. நேரடியாகவே விஜய்யை பாடல் வரிகள் மூலம் ரஜினி தாக்கிவிட்டார் என ரசிகர்கள் கூற இரண்டு தரப்பினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது.
ஆடியோ வெளியீட்டு விழா: சூழல் இப்படி இருக்க நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசிய ரஜினிகாந்த், "காட்சில் சிறிய விலங்குகள் பெரிய விலங்குகளை தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். உதாரணமாக காக்காவையும், கழுகையும் எடுத்துக்கொள்ளுங்கள். கழுகு உயர பறந்துகொண்டிருக்கும். காக்காவும் கழுகின் உயரத்துக்கு பறக்க முயலும். ஆனால் அதனால் அப்படி பறக்க முடியாது. கழுகோ இறக்கையைகூட அசைக்காமல் உயர பறக்கும். காக்காவோ கழுகை கொத்த முயலும். அதுவால் அப்படி செய்ய முடியாது" என்றார்.
விஜய்தான் காக்காவா?: அவரது இந்தப் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும்போது ரஜினி இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் விஜய்யை காக்கா என்றும் தன்னை கழுகு என்றும் சொல்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப; லியோ ஆடியோ லான்ச்சில் இதற்கு விஜய் பதிலடி கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
மிஷ்கின் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குநரும் நடிகருமான மிஷ்கினிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மிஷ்கின், "ரஜினி கூறியதை இப்படி பார்க்க வேண்டாம். அவ்வளவு பெரிய மனிதர் யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லியிருக்கமாட்டார். அதேபோல் விஜய்யும் சாதாரண ஆள் கிடையாது. அவரும் பெரிய் ஆள்தான். ரசிகர்கள் சண்டை போடுவதை இரண்டு பேருமே புரிந்துகொள்ள வேண்டும்.
பெரியவர் சொன்னதை விடுங்க: விஜய்யை ரஜினிக்கே பிடிக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். எனவே பெரியவர் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டு குழந்தைகள் சண்டை போட்டுக்கொள்ளக்கூடாது. ஜெயிலர் படமும் பெரிய படம்தான்; லியோவும் பெரிய படம்தான். இரண்டு படங்களையும் பார்த்து ஆதரவை கொடுப்போம். ரஜினிகாந்த் எங்களுக்கு எல்லாம் மூத்தவர்" என்றார்.


Click it and Unblock the Notifications











