ராஜாவிடம் பணிந்த மைத்ரி மூவிஸ்.. தமிழில் தயாரித்த 2 படத்துலையும் பஞ்சாயத்து ஓவர்? 50 லட்சம் தண்டம்
சென்னை: இசைஞானி இளையராஜா, தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகில் கொண்டாடப்படுகிற, பெரிதும் கவனிக்கப்படுகிற இசையமைப்பாளர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட லண்டனுக்குச் சென்று சிம்பொனி அரங்கேற்றி வந்தார். இதற்காக தமிழ்நாடு அரசு அவருக்கு சிறப்பு பாராட்டு விழாவே நடத்தியது. பரவலாக நேசிக்கப்படும் இளையராஜா அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகிறார். குறிப்பாக தனது பாடல்களை தனது அனுமதி இல்லாமல் யார் எல்லாம் திரைப்படத்தில் பயன்படுத்துகிறார்களோ, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து, அதில் வென்றும் விடுகிறார். அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றது.
தெலுங்கு திரையுலகில் பல நூறு கோடிகளை முதலீடாக போட்டு, ஆயிரம் கோடிகளை வசூலிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம், தமிழிலும் தங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்க யோசித்து, மாஸ் நடிகரான அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்ற படத்தை தயாரித்து ரிலீஸ் செய்தனர். படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, வணிக ரீதியாக பெரிய வெற்றியைக் குவித்தது. அதேபோல் கடந்த தீபாவளிக்கு அவர்களின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டியூட் படம் வெளியானது. இந்த படமும் அசால்ட்டாக பாக்ஸ் ஆபீஸில் வெற்றியை தனதாக்கியது.

இரண்டு படங்களும் ஹிட், இரண்டு படங்களும் லாபம் ஈட்டிக் கொடுத்தது. இப்படி இருக்கும்போது, இந்த இரண்டு படத்திலும், இளையராஜாவின் பாடல்கள் அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலின் ஒலிபரப்பு உரிமம் சோனி மியூசிக் நிறுவனத்திடம் இருந்ததால், மைத்ரி தரப்பில் இருந்து சோனி மியூசிக் நிறுவனத்திடம் அனுமதி வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.
வழக்கு: ஆனால் இந்தியாவில் உள்ள காப்புரிமை சட்ட விதிகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை விதிகளின் படி, படக்குழுவினர், பாடலை உருவாக்கிய இசைஞானி இளையராஜாவிடம் முறையாக அனுமதி வாங்கி இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, இளையராஜாவிடம் அவர்கள் அனுமதி வாங்காததால், இரண்டு படங்களிலும் பயன்படுத்தப்பட்ட பாடல்களையும் நீக்கிவிட்டு, ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் குட் பேட் அக்லி படத்தில் இருந்து இளையராஜாவின் பாடல்கள் நீக்கப்பட்டு ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.

50 லட்சம்: இப்போது இந்த விவகாரத்தில் இளையராஜா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் காம்ப்ரமைஸ் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, இரண்டு படங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடாக மைத்ரி மூவிஸ் இளையராஜாவுக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விவரம் தெரியாதவர்கள் இளையராஜாவை விமர்சித்து வருகிறார்கள். விவரம் தெரிந்தவர்கள், இனிவரும் காலங்களிலாவது இளையராஜாவிடம் அனுமதி வாங்கிவிட்டு பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











