Bala: பேசுவதை கேட்டா காரி துப்பிடுவாங்க.. பாலா பற்றி சீமான் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வணங்கான்' படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையிலும் அண்மையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் செய்திருந்தார். இதில் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
என் அன்பு தம்பி பாலா, பழம் எவ்வளவு தித்திப்பாக இருக்குமோ, அதேபோல பாலா என்று பெயரை சொன்னதும் தித்திப்பாக இருக்கும். சேது படத்தை ப்ரிவ்யூ ஷோவில் நான் பார்த்த போது, பாலாவை கட்டிப்பிடித்து கண்கலங்கி விட்டேன். அந்த படம் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது, இறுக கட்டி அணைத்துக்கொண்ட அந்த பிணைப்பு இப்போது வரை இருக்கிறது. வெவ்வேறு பாதையில் நாங்கள் இருந்தாலும், நான் ஒரு பாதையில் பயணம் செய்தாலும், அவர் ஒரு பாதையில் பயணம் செய்தாலும், எங்கள் இதயம் எப்போதும் நெருக்கமாகத்தான் இருக்கின்றன.

இயக்குநர் பாலா ஒரு சிற்பி: பாலா கதை எழுதும் ஆள் இல்லை, படைப்புகளை செதுக்கும் ஆள், அன்பு தம்பி ஜிவி பிரகாஷ் சொன்னது போல, இத்தனை முறை தான் கண்களை இமைக்க வேண்டும், இப்படி மெதுவாக நடக்க வேண்டும் தனக்கு என்று தனி அடையாளத்தை வைத்து இருக்கிறார். அதனால் தான் அவரை பலரும் இயக்குநர் இல்லை, சிற்பி என்கிறார்கள். அதில் எங்களுக்கு என்ன பெருமை என்றால், இந்த சிற்பியை செதுக்கிய சிற்பி தான் பாலு மகேந்திரா. அவர் மூன்றாம்பிறை, மூடுபனி என பல படைப்புகளை தந்து இருக்கிறார். அவரின் ஆகச்சிறந்த படைப்பு தான் தம்பி பாலா, ராம், வெற்றிமாறன்.
சிறந்த படைப்பு: பாலாவின் படத்தில், சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள் படங்கள் சிறந்த படைப்புகள். ஒவ்வொரு படத்தின் விவாதத்தின் போதும், பாலா,சிங்கம் புலி என மூன்று பேரும் இருப்போம். நானும் பாலாவும் பேசிக்கொள்வதை பார்த்து விட்டு, சிங்கம் புலி சொல்லுவான், வெளியில சமூகம் உங்களை பெரிய இடம் என்று நினைக்கிறது. ஆனால், நீங்க ரெண்டு பேரும் பேசுவதை கேட்டா காரி துப்பிடுவாங்க என்பார். அந்த அளவிற்கு பாலாவும் நானும் ரொம்ப அன்பாக பேசிக்கொள்வோம். எங்களிடம் பசி இருக்கிறது, கவலை இருக்கிறது, மகிழ்ச்சி இருக்கு சண்டை இருக்கிறது.
மிகுந்த மகிழ்ச்சி: இப்போதுதான் பாலா சினிமாவிற்கு வந்தது போல இருக்கிறது. ஆனால், 25 ஆண்டு காலம் அவர் பயணித்து இருக்கிறார் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலாவிற்கும் எனக்கும் மனச்சோர்வு வரும் போது, தம்பி சிங்கம்புலியைத்தான் அழைத்துக்கொண்டு வருவோம்.அவர் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. எங்கள் மூன்று பேரின் நட்பு அப்படிப்பட்டது.
வெற்றிப்படமாக இருக்கும்: தொடர்ந்து பேசிய சீமான், அருண் விஜய்க்கு வணங்கான் படம் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். அதே போல சுரேஷ் காமாட்சிக்கு மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அதே போல, இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்று அந்த விழாவில் சீமான் பேசினார்.


Click it and Unblock the Notifications











