தங்கமே தேடி வந்தேனே... 6 ஆண்டுகளை கடந்த நானும் ரெளடி தான்
சென்னை : காமெடி, ஆக்ஷன் கலந்து 2015 ல் வெளியான படம் நானும் ரெளடி தான். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தனுஷின் ஒன்டர்பார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டு, லைகா ப்ரொடக்ஷன்ஸ் விநியோகித்தது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 2015 ம் ஆண்டு அக்டோபர் 21 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் முதலில் அனிருத் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பல படங்களில் அனிருத் இசையமைத்து வந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது. கிட்ட 75 நாட்கள் இந்த படம் படமாக்கப்பட்டது. இதே போல் ஹீரோயின் ரோலில் நடிக்க சமந்தாவிடம் தான் முதலில் பேசப்பட்டுள்ளது. அதன் பிறகு லாவண்யா த்ரிபாதி ஹீரோயின் ரோலில் நடிக்க ஒப்பந்தமானார்.
19 வயது இளைஞன் கேங்ஸ்டர் ஆக ஆசைப்படுவதாக தான் விக்னேஷ் சிவன் கதையை எழுதி இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை எனவும், தான் இசையமைப்பாளராகவே தொடர விரும்புவதாகவும் அனிருத் கூறியதால் கதையில் மாற்றம் செய்து விஜய் சேதுபதி, நயன்தாராவை நடிக்க வைத்துள்ளனர். தனது சமீபத்திய படங்களுக்காக உடல் எடையை அதிகரித்திருந்த விஜய் சேதுபதி, இந்த படத்திற்காக இரண்டு மாதங்கள் போராடி எடையை குறைத்தார்.
நயன்தாராவின் அப்பாவாக நடிக்க முதலில் ராஜ்கிரணிடம் தான் பேசப்பட்டுள்ளது. ஆனால் கடைசியாக அழகம் பெருமாள் அந்த ரோலில் மாற்றப்பட்டார். தமிழில் முதல் முறையாக இந்த படத்திற்காக தானே டப்பிங் பேசி, நடித்திருந்தார் நயன்தாரா. காது கோளாத பெண் ரோலில் வரும் நயன்தாரா, ஒயின்ஷாப்பில் சென்று மதுபானம் வாங்கும் காட்சி ஒன்று வைக்கப்பட்டது. இது தொடர்பான ஃபோட்டோவும் அந்த சமயத்தில் வைரலானது. ஆனால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அந்த காட்சி பிறகு நீக்கப்பட்டது.
நயன்தாரா கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் ஃபோட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்காக பிறகு அவர் விளக்கம் அளித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த கட்சிகள் நயன்தாரா மற்றும் இந்த படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தின. இதனால் அந்த காட்சி நீக்கப்பட்டது.
இந்த படத்தில் வரும் ஆறு பாடல்களில் ஐந்து பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். ஒரு பாடலை தாமரை எழுதி இருந்தார். நான்கு பாடல்களை அனிருத் பாடி இருந்தார். முதலில் அக்டோபர் 2 ம் தேதி தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் விஜய்யின் புலி படம் ரிலீஸ் செய்யப்பட்டதால், இந்த படம் அக்டோபர் 21 ம் தேதி தசராவை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 475 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மாநகரம் படத்தில் வடிவேலு பேசும் பிரபலமான டயலாக்கின் காரணமாக இந்த படத்திற்கு நானும் ரெளடி தான் என பெயரிட்டனர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.


Click it and Unblock the Notifications











