என்ன வாய் மட்டும் தான் வேலை செய்யுது.. வித்தியாசமான குரலாலே தமிழ் சினிமாவில் கலக்கிய பாண்டு!
சென்னை: தளபதி விஜய்யின் போக்கிரி படத்தில் நடிகர் வடிவேலு, என்ன வாய் மட்டும் தான் வேலை செய்யுது என பாண்டுவை கலாய்ப்பார்.
Recommended Video
தனது வித்தியாசமான குரலை வைத்தே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கிய நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் பாண்டு நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்கள் குறித்து இங்கே காண்போம்.

முதல் படம்
1981ம் ஆண்டு இயக்குநர் ஜி.என். நாகராஜன் இயக்கத்தில் பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான கரையெல்லாம் செண்பகப்பூ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாண்டு. ஆனால், அதற்கு முன்னதாகவே 1970ம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கரின் மாணவன் படத்தில் மாணவனாகவும் எம்.ஜி.ஆரின் சிரித்து வாழ வேண்டும் படத்தில் சைடு ரோலிலும் நடித்துள்ளார் பாண்டு.

வாய் மட்டும் தான் வேலை செய்யுது
1970 முதல் சினிமாவில் பயணித்து வந்த நடிகர் பாண்டு ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தளபதி விஜய்யின் போக்கிரி படத்தில் நடிகர் வடிவேலு, என்ன வாய் மட்டும் தான் வேலை செய்யுது என லிஃப்ட் சீனில் நடிகர் பாண்டுவை கலாய்ப்பார். அவரது வித்தியாசமான குரல் மற்றும் முக பாவணைகளின் மூலமாகவே ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

மறக்கமுடியாத நாட்டாமை
பெரும்பாலும் தனது இயல்பான தோற்றத்திலேயே வந்து ரசிகர்களை சிரிக்க வைத்து செல்லும் நடிகர் பாண்டுவுக்கு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் நாட்டாமை படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தை கொடுக்க, அந்த வேடத்திலும் தன்னால் சிறப்பாக சிரிக்காமல் செய்ய முடியும் என்று தனது குணசித்திர நடிப்பையும் வெளிக்காட்டி இருந்தார் நடிகர் பாண்டு.

காதல் கோட்டை
தல அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டான காதல் கோட்டை படத்தில் ராஜஸ்தானில் டர்பன் கட்டிக் கொண்டு ராமசாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார் நடிகர் பாண்டு. உன்னைக் கொடு என்னைத் தருவேன், சிட்டிசன், வில்லன், வரலாறு என ஏகப்பட்ட அஜித் படங்களிலும் நடிகர் பாண்டு நடித்துள்ளார்.

நெருப்பு மாதிரி இருந்தான் சார்
கில்லி படத்தில் "நெருப்பு மாதிரி இருந்தான் சார்" என்றும், விஜய்க்கு பதிலாக ஜெமினி கணேசனை வரைய சொல்லும் காட்சியிலும் காமெடியில் கலக்கி எடுத்திருப்பார் நடிகர் பாண்டு. ஷாஜகான், கில்லி, போக்கிரி, வில்லு என அதிகளவு விஜய் படங்களிலும் நடித்துள்ளார் பாண்டு.

ரசிகர்கள் இரங்கல்
தனது வித்தியாசமான குரல் மற்றும் பாடி லாங்வேஜ் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை இத்தனை காலமாக சிரிக்க வைத்து வந்த நடிகர் பாண்டு, சிறந்த ஓவியக் கலைஞரும் கூட, அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரை பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications