பெப்சி- தயாரிப்பாளர்கள் மோதல்: நடிகர் சங்கம் அவசரக் கூட்டம்!
சென்னை: சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்சி மற்றும் தயாரிப்பாளர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் அதனால் வேலையின்றி முடங்கிக் கிடக்கும் நிலை குறித்து விவாதிக்க நாளை நடிகர் சங்கம் அவசர ஆலோசனை நடத்துகிறது.
வட பழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
புதிய சம்பள உயர்வு விகிதத்தை பெப்சி தொழிலாளர்கள் நிர்ணயித்து உள்ளனர். அதை தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்து, பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர் சங்கத்தை உருவாக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
இருதரப்பினருக்கும் இடையே அரசின் தொழிலாளர் நல ஆணையம் சமரச முயற்சி மேற்கொண்டது. புதிய சம்பள நிர்ணயம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியது. இப் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இதையடுத்து பெப்சி தொழிலாளர்கள் கடந்த 7-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லைட்மேன்கள், ஸ்டண்ட் நடிகர்கள், துணை நடிகர், நடிகைகள், கலை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், மேக்கப் மேன்கள், டிரைவர்கள் என அனைத்து தொழிலாளர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் 35-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலும், ஓட்டலிலும் முடங்கி கிடக்கின்றனர். தயாரிப்பாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் இடையே சமரசம் ஏற்படுத்த இயக்குனர்கள் சங்கம் முயற்சித்து வருகிறது. நடிகர், நடிகைகளும் சமரச முயற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்காக நடிகர்- நடிகைகளின் அவசர கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் நட்சத்திர ஓட்டலில் நாளை (11-ந்தேதி) இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். அனைத்து நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரையுலக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











