விரைவில் நடிகர் சங்க தேர்தல்... ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல்
நடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை: நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது. நடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் நாசர், விஷால் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, அந்த 6 மாதகால அவகாசமும் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் சங்கத் தலைவர் நாசர். அப்போது அவர், "தேர்தலுக்காக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து அதன்பின்னர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் தேதியை ஓய்வுபெற்ற நீதிபதி அறிவிப்பார். தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்றார். இந்நிலையில் இன்று மாலை மீண்டும் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது.
தியாகராயர் நகரில் உள்ள தனியார் ஹோட்டல் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் மீண்டும் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிட இருக்கிறார். அவரை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையிலான அணி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











