நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் அஜீத் - ஷாலினி... சூர்யா, சிவகார்த்திகேயனும் பங்கேற்பு!
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் அஜீத், தன் மனைவி ஷாலினியுடன் இன்று பங்கேற்றார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி, தமிழகமெங்கும் மாணவர்களும் இளைஞர்களும் பெரும் திரளாகக் கிளர்ந்து எழுந்து போராடி வருகின்றனர். நான்கு தினங்களாகத் தொடரும் இந்தப் போராட்டம், ஒரு வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக திரைத்துறையினரும் களத்தில் இறங்கியுள்ளனர். நேற்று தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இன்று நடிகர் சங்கத்தினர் தங்கள் வளாகத்தில் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதத்துக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் முதலில் வந்தனர்.

அடுத்து நடிகர் அஜீத் தன் மனைவி ஷாலினியோடு வந்து கலந்து கொண்டார். பல்கேரியாவில் படப்பிடிப்பிலிருந்த அஜீத், நேற்றே சென்னை திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், சத்யராஜ், மோகன், மனோபாலா, நடிகர் ரகுமான் உள்ளிட்டோர் காலையிலேயே வந்து உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தனர்.


Click it and Unblock the Notifications











