ஆயுட்கால உறுப்பினருக்கு நடிகர் சங்கம் கண்ணீர் அஞ்சலி!
தென் இந்திய நடிகர் சங்கம் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவுக்கு தென் இந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது..அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
'முன்னால் தமிழக முதல்வரும் தமிழ் கலை - இலக்கிய பிதாமகனும் நடிகர் சங்கத்தின் மூத்த ஆயூட்கால உறுப்பினருமான கலைஞர் மு .கருணாநிதி அவர்கள் மறைந்த துயர செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம், வேதனை அடைகிறோம் .திரைக்கதை-வசன ஆசிரியராக சினிமா பிரவேசம் நடத்தி அதன் பிறகு அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதல்வராக 5 முறை மக்களுக்கு தொண்டாற்றியவர்.
ஒரு எழுத்தாளராக சினிமாவில் அவரைப்போல் சாதித்தவர் எவரும் இல்லை. சினிமாவில் அவரது வசனங்கள் ஹீரோக்களுக்கு இணையாக பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, அது மட்டுமல்லாமல் அவர் இயற்றிய சினிமா வசனங்கள் காலங்களை வென்று வாழ்பவை. அவரது திரைக்கதைகள் ஹீரோக்களையும் உருவாக்கியது.
தான் முதல்வராக இருக்கும் போது தமிழ் சினிமாவின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். கலை உலகிலும் திரை உலகிலும் அரசியலிலும் அவரது அர்ப்பணிப்பு என்றும் நிலைப்பவை.
அவர் இயற்றிய குறளோவியம், சங்கத்தமிழ், பூம்புகார், நெஞ்சுக்குநீதி, தொல்காப்பிய பூங்கா போன்ற நூல்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அவரது இழப்பு தமிழகத்துக்கும் திரை உலகிற்கும் மாபெரும் பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் துக்கத்தில் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.


Click it and Unblock the Notifications











