இனிமே இப்படியொருவர் பிறக்க முடியுமா? அந்த சிம்மாசனம் சிவாஜிக்கு மட்டுமே.. பிறந்தநாள் ஸ்பெஷல்!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கலைத் துறையில் எண்ணற்ற சாதனைகளை செய்து அசத்திய சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் அவரது நினைவுகளை நினைத்து வருகின்றனர்.
தெய்வங்கள், அரசர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களை தனது நடிப்பால் மக்களுக்கு காட்டிய மகத்தான கலைஞர் நடித்த டாப் 5 வசனங்கள் குறித்து இங்கே காண்போம்.

சிவாஜி கணேசன் பிறந்தநாள்
1928ம் ஆண்டு சூரக்கோட்டையில் பிறந்த கணேசன் சத்ரபதி சிவாஜியாக நாடகம் ஒன்றில் சிறப்பாக நடித்து அசத்திய நிலையில், சிவாஜி கணேசன் என்றே அழைக்கப்பட்டார். 2002ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி இயற்கை எய்திய அந்த மகா நடிகனின் 93வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஓடினேன் ஓடினேன்
எண்ணற்ற சூப்பரான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த நடிகர் திலகம், தனது முதல் படமான பராசக்தி படத்திலேயே தான் நடிப்பிற்காகவே பிறந்தவன் என்பதை நிரூபித்து இருப்பார். கருணாநிதியின் வசனத்தில் "ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினேன்" என அவர் பேசிய வசனங்கள் என்றுமே தமிழ் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது.
மாமனா மச்சானா மானங்கெட்டவனே
சிறு புல்லையையும் புயலாய் மாற்றும் வீர வசனங்கள் நிறைந்த படமாக வீர பாண்டிய கட்டபொம்மன் உருவாகி இருந்தது. 1959ல் இயக்குநர் பி.ஆர். பந்தலு இயக்கிய அந்த படத்தில் சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனாக சிவாஜி நடித்து இருப்பார். ஜாக்சன் துரையிடம் அவர் பேசும் அந்த வரி கட்ட முடியாது என்கிற வசனத்தை பள்ளி கல்லூரிகளில் பல முறை நாடகங்களாக போட்டு இருப்பார்கள். கிஸ்தி, திரை, வரி, வட்டி.. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது என தொடங்கி.. அல்லது நீ மாமனா மச்சானா.. மானங்கெட்டவனே எதற்கு கேட்கிறாய் திரை ஏன் கேட்கிறாய் வட்டி என பொங்கி எழும் வசனங்கள் இன்று கேட்டாலும் புல்லரித்து விடும்.
பொறுத்தது போதும் பொங்கி எழு
1954ம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கண்ணாம்பா, டி.ஆர். ராஜகுமாரி நடிப்பில் வெளியான மனோகரா படத்தின் வசனங்களும் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாது. அரச சபையில் கைதி போல இளவரசன் மனோகரன் இழுத்து வரப்படும் காட்சியில் சிவாஜியின் சிம்மக் குரலில் ஒலிக்கும் வசனங்கள் ஒவ்வொன்றும் இடி முழக்கம் தாம். அழைத்து வரவில்லை.. இழுத்து வந்தீர்கள்.. அரசன் உத்தவு என்ன ஆண்டவன் உத்தரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என வெடித்து தள்ளி இருப்பார்.
தெய்வமகன்
தேவையில்லன்னு நினைச்ச தந்தை, அவரை தேடி அலைந்த மகனும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கிற அற்புதமான காட்சி என ஆரம்பிக்கும் தெய்வமகன் வசன காட்சி எல்லாம் ஆல் டைம் எபிக் என்று தான் சொல்ல வேண்டும். தன்னைப் போலவே கோர முகத்துடன் இன்னொரு பிள்ளை இந்த உலகில் கஷ்டப்படக் கூடாது என அழிக்க சொன்ன மகன், வளர்ந்து வாலிபனாகி தந்தை முன் நின்று பேசும் வசனங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.
நக்கீரா
இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1965ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் திருவிளையாடல். சிவ பெருமானின் திருவிளையாடல்கள் சிலவற்றை அருமையாக படமாக்கி இருப்பார்கள். அதிலும், அந்த நாகேஷ் உடன் வரும் "சொக்கா சொக்கா" தருமி காட்சியில் வரும் வசனங்களும் அதனை தொடர்ந்து நக்கீரரை சுட்டு எரிக்கும் வசன காட்சியிலும் மிரட்டி இருப்பார் சிவாஜி கணேசன்.


Click it and Unblock the Notifications











