Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகவேள் எம்.ஆர். ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ மீண்டும் மேடைக்கு வருகிறது
சென்னை: அநேக ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ரத்தக்கண்ணீர் நாடக வடிவில் மீண்டும் மேடையை அலங்கரிக்கப்போகிறது.
எம்.ஆர்.ஆர். வாசு, ராதா ரவி, வாசு விக்ரம் ஆகியோரை தொடர்ந்து நடிகவேளின் பேரன் சதீஷ் தற்போது ரத்தக்கண்ணீர் நாடகத்தில் தனது தாத்தாவின் வேடத்தை ஏற்று நடிக்க இருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம், சதீஷ் ஆகியோர் பங்கேற்று ரத்தகண்ணீர் நாடகம் பற்றி தெரிவித்தனர்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா
நாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா. சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் கொடிகட்டிப் பறந்தவர். அவருடைய பெயருக்கு முன்பாக ‘நடிகவேள்' எனும் பட்டம் அலங்கரித்தது.
பகுத்தறிவு கொள்கைகள்
பல்வேறு மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் வெளிப்படையான பகுத்தறிவு கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்களில் எம்.ஆர். ராதா முக்கியமானவர். "ரத்தக்கண்ணீர்", "தூக்கு மேடை", "லட்சுமிகாந்தன்", "பம்பாய் மெயில்", "விமலா", "விதவையின் கண்ணீர்", "நியூஸ் பேப்பர்", "தசாவதாரம்", "போர் வாள்" போன்ற நாடகங்களை நடத்தினார்.
ரத்தக்கண்ணீர்
எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்' மேடை நாடகம் காலத்தால் அழியாத புகழ் பெற்றது. அந்த படைப்பு திரைப்படமாகவும் வந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
3500 முறை மேடை
3,500 தடவை மேடை ஏறிய நாடகம் இது. இதில், செய்தித்தாளை ராதா படிக்கும் ஒரு சீன் வரும். அன்றாடம் வரும் செய்தித்தாளை கையில் வைத்துக்கொண்டு, அதில் வரும் செய்திகளைப் படித்து "கமெண்ட்" அடிப்பார். இதற்காகவே, ரத்தக்கண்ணீர் நாடகத்தை பலமுறை பார்த்தவர்கள் ஏராளம்.
அடியே காந்தா.....
அதே போல ‘அடியே காந்தா'... என்ற வசனம் பிரபலமானது. ராதா நாடகங்களில் பிரமாண்டமான காட்சி ஜோடனைகள், சீன்- செட்டிங்குகள் எதுவும் கிடையாது.
ஒரு கறுப்புத்திரை; ஒரு வெள்ளைத்திரை. இதை வைத்துக்கொண்டே, தன் நடிப்பு ஆற்றலைக் கொண்டு, நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி விடுவார்.
வசனப்புத்தகம்
முதல்முறையாக ஒரு திரைப்படத்தின் வசனங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது எம்.ஆர். ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்' படத்துக்குத்தான். படம் வெளியாவதற்கு முன்பாகவே புத்தகம் வெளியானதுதான் இதன் சிறப்பம்சம்.
வாரிசுகள் அரங்கேற்றம்
எம்.ஆர். ராதாவின் மறைவிற்கு பிறகும் ரத்தக்கண்ணீர் மேடை நாடகத்தை அவரது வாரிசுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட சமூக நாடகத்தை நடத்தி வருவது நாடக உலகில் அபூர்வமான விஷயமாகும்.
நடிகவேளின் பேரன்
எம்.ஆர்.ஆர். வாசு, ராதா ரவி, வாசு விக்ரம் ஆகியோரை தொடர்ந்து நடிகவேளின் பேரன் சதீஷ் தற்போது ரத்தக்கண்ணீர் நாடகத்தில் தனது தாத்தாவின் வேடத்தை ஏற்று நடிக்க இருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வாசு விக்ரம், சதீஷ் நாடகம் பற்றிய விபரங்களை தெரிவித்தனர்.
மீண்டும் ரத்தக்கண்ணீர்
இம்மாதம் 12 ஆம் தேதி சென்னையில் நாடகத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். முன்னணி சபாக்களுடன் ஆலோசனை செய்த பிறகு ‘ரத்தக்கண்ணீர்' நாடகம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.
மீண்டும் திரைப்படமாகிறது
அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் அயல்நாடுகளில் இந்நாடகத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அத்துடன் ‘ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தை தற்கால சூழலுக்கு ஏற்ப புதுப்பித்து திரைக்கு கொண்டுவரவும் முயற்சி செய்துவருவதாக கூறி இருக்கிறார் சதீஷ்.
அதே இசையமைப்பாளர்
‘ரத்தக்கண்ணீர்' நாடகத்தில் ராதா ரவி நடித்த காலத்தில் இசையமைத்த அலெக்ஸ்தான் தற்போதும் இசையமைக்க இருக்கிறார்.
எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார்
இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ். ரவிக்குமார், பிரபு சாலமன் நடிகர்கள் பிரபு, சார்லி மற்றும் ‘நல்லி' குப்புசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட உள்ளனர்.
டிக்கெட் விலை
ஒன்றரை மணி நேரம் நடைபெற இருக்கும் ரத்தக்கண்ணீரின் டிக்கட் விலை ரூ. 5,000, ரூ. 3,000 மற்றும் ரூ. 1,000 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்போதைக்கு ஆயிரம் டிக்கட்டுகள் விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சாமான்ய ரசிகர்களுக்கு
‘டிக்கட் விலையை கேட்ட உடனேயே கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைத்து இருக்கிறதே' என வருந்துகிறார்கள் எம்.ஆர்.ராதாவின் ரசிகர்கள். சாமான்ய ரசிகர்களையும் சென்று சேரும் வண்ணம் டிக்கட் விலையை மாற்றியமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் நடிகவேளின் வாரிசுகள் ஆவண செய்வார்களா?