Kalki Mistakes: பிரபாஸ் ரோலை டம்மி ஆக்கிட்டாரே நாக் அஸ்வின்?.. கல்கி படத்தில் உள்ள பெரிய மிஸ்டேக்!
சென்னை: மறைந்த பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தை கீர்த்தி சுரேஷை வைத்து இயக்கிய நாக் அஸ்வின் அடுத்ததாக பிரபாஸை வைத்து இப்படியொரு பிரம்மாண்ட படத்தை கொடுப்பார் என டோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் ரசிகர்களே கனவிலும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
இந்த படத்துக்கு புரமோஷன் செய்யும் பணிகளையாவது ராஜமெளலியிடம் கொடுத்திருந்தால் படத்தை வேறலெவலுக்கு புரமோஷன் செய்திருப்பார். ஆனால், இந்த படத்தின் புரமோஷனை அந்தளவுக்கு செய்யாமல் புஜ்ஜி காரை மட்டுமே பெரியளவில் புரமோட் செய்தது ஏன்? என்கிற கேள்வி தான் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பெரிதாக எழுகிறது.

மேலும், பிரபாஸை கடைசி வரை டம்மியாகவே காட்டியதற்கு பதிலாக நெகட்டிவ் ஷேடிலேயே அவரை நடிக்க வைத்து மிரட்டியிருந்தால் இன்னமும் படத்திற்கு பெரிய பலமாகவும் அவரது ரசிகர்களுக்கு திருப்தியாகவும் இந்த படம் அமைந்திருக்கும். கல்கி 2898 ஏடி படத்தில் நாக் அஸ்வின் செய்த மிஸ்டேக்குகள் குறித்து இங்கே லேசாக அலசுவோம்.
ஹாலிவுட் படங்களில் இருந்து சுட்டது: பாகுபலி திரைப்படம் முழுக்க முழுக்க இந்திய படமாகவே உள்ள நிலையில், ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கிறேன் என முடிவெடுத்த நாக் அஸ்வின் தோர், ஸ்டார் வார்ஸ், டூன், மேட் மேக்ஸ் ஃபியூரி என ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகளையும் பிரம்மாண்ட செட்களையும் உருவாக்கியது ஏன் என்கிற கேள்வி தான் படத்தை பார்த்த அனைவர் மத்தியிலும் எழுகிறது. 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் கல்கி அவதாரத்தை காட்ட வேறு ஒரு கற்பனை உலகத்தை ஹாலிவுட் படங்களின் சாயல் இல்லாமல் நாக் அஸ்வின் உருவாக்கி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.
டம்மியாக்கப்பட்ட பிரபாஸ்: கல்கி படத்தின் நாயகன் பிரபாஸ் தான் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பைரவா கதாபாத்திரத்தில் பிரபாஸை காட்சிப்படுத்தியதிலேயே இந்த படத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து விடுகிறது. கல்கி அவதாரமாகவே பிரபாஸை அடுத்த பாகத்தில் காட்டினால் தான் பிரபாஸ் படமாகவே இது கருதப்படும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். அந்த வகையிலும் நாக் அஸ்வின் சொதப்பியுள்ளார். முதல் பாதி முழுக்க தேவையில்லாத காட்சிகளுக்கு நிறைய டீட்டெய்ல் போன நாக் அஸ்வின் 2ம் பாதியில் வெறும் பிரபாஸ், அமிதாப் பச்சன் சண்டைக் காட்சிகளை மட்டுமே வைத்து படத்தை முடித்து விட்டார். நிறைய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர்கள் யார் என்பதே புரியவில்லை என்பது தான் நிதர்சனம்.
புது படைப்புகள்: கல்கி அவதாரம் புது அவதாரம் என்பதால் சுப்ரீம் யஷ்கின் என வில்லனை புதிதாக படைத்த நாக் அஸ்வின் கடவுள் சைடில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்களில் எந்தவொரு புதுமையையும் செய்யாமல் மகாபாரத தொடர்ச்சியாகவே உருவாக்கி இருப்பது ஏன் என்கிற கேள்வியை எழுப்புகிறது. வீரன், மரியம் போன்ற கதாபாத்திரங்கள் எப்போதிருந்து கல்கி அவதாரத்திற்காக காத்திருக்கின்றனர் என்பதும் சரியாக விளக்கப்படவில்லை. அதே போல கேமியோக்களாக வரும் பிரபலங்கள் பெயர் அளவில் மட்டுமே வந்து செல்வது அந்த பிரபலங்களின் ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது.
திஷா பதானியை வேஸ்ட் பண்ணிட்டாங்க: கல்கி படத்தின் புரமோஷன்களில் திஷா பதானி தலை காட்டாததற்கு காரணமே அவரது கதாபாத்திரம் படத்தில் எந்தவொரு முக்கியத்துவமும் இல்லாமல் போனதால் தானா? என அவரது ரசிகர்கள் திட்டத் தொடங்கி விட்டனர். ராக்ஸி எனும் கதாபாத்திரத்தில் திஷா பதானி வருவதும் பிரபாஸ் உடன் அவர் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் எல்லாமே படத்துக்கு பலவீனமாகவே அமைந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் அதிகமாகவே எழுந்துள்ளது. இதுபோன்ற குறைகளை எல்லாம் அடுத்த பாகத்தில் நாக் அஸ்வின் சரி செய்து கல்கி 2898 ஏடி முதல் பாகத்தை விட தரமான சம்பவத்தை செய்ய வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.


Click it and Unblock the Notifications











