Naga Chaitanya Sobhita Wedding: தாலி கட்டியாச்சு.. சோபிதாவை கரம் பிடித்த நாக சைதன்யா.. ஒரே சந்தோஷம்!
ஹைதராபாத்: நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவும் இன்று அதாவது, டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் என்ற செய்திதான் கடந்த சில வாரங்களாகவே சினிமா உலகில் ஹாட் டாப்பிக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது. இவர்களின் திருமண ஏற்பாடுகள் ஹைதராபாத்தில் மிகவும் பிரமாண்டமாக பல கோடிகள் செலவில் செய்யப்பட்டது. நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமண பரிசாக, நாக சைதன்யாவின் தந்தை, நாகர்ஜுனா ரூபாய் 2.5 கோடிகள் செலவில், சொகுசுக் காரான லக்சாஸ் காரினை வாங்கிக் கொடுத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், மிகவும் விலையுயர்ந்த பொருட்களை மகனுக்கும் புது மருமகளுக்கும் கொடுக்க வாங்கிக் குவித்துள்ளார். இப்படியான நிலையில், குடும்பத்தினர், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் தற்போது நடந்தது. புதுமணத் தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்த சில ஆண்டுகளாக, காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானபோதே திரைப்பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்தினர்.

இணையத்தில் நுழைந்தாலே நாக சைதன்யா சோபிதா துலிபாலா திருமணம் தொடர்பாக தான் செய்திகள் பல்லாயிரக்கணக்கில் குவிகின்றன. அதிலும் நாக சைதன்யாவின் முன்னாள் திருமணத்துடன் தற்போது நடைபெறும் திருமணத்தை ஒப்பிட்டு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
விவாகரத்து: நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை நீண்ட நாள் காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியர், அதன் பின்னர் விவாகரத்து பெற்று சட்டப்பூர்வமாக பிரிந்தனர். சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பின்னர்தான், நாக சைதன்யா, சோபிதாவுடன் டேட் செய்யத் தொடங்கினார்.
திருமணம்: இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் இரவு 8.13 மணிக்கு நடைபெற்றது. கெட்டிமேளம் முழங்க, உறவினர்களும் நண்பர்களும் அட்சதை வீச, நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவுக்கு தாலி கட்டினார். மணமேடையில் இருவரும், தங்க ஜரிகையால் தைக்கப்பட்ட, விலையுயர்ந்த ஆடை அணிந்திருந்தனர். மேலும், சோபிதா, கிட்டத்தட்ட கிலோ கணக்கில் தங்க நகைகளும், வைரக் கற்கள் பதித்த நகைகளும், பிளாட்டினம் பதித்த நகைகளும் அணிந்திருந்தார். தாலி கட்டிய பின்னர் இருவருமே மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
சடங்கு: அதேபோல் திருமணம் முடிந்த பின்னர், அதாவது தாலி கட்டிய பின்னர், மணமேடையில் மூட்டப்பட்டிருந்த வேள்வித் தீயினைச் சுற்றி வந்தனர். மேலும் திருமணத்திற்குப் பிறகான சடங்குகளில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக ஈடுபட்டனர். அதேபோல், இருவரும் தங்களது பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











