இது நமக்கான நேரம்.. ஹாலிவுட் சென்ற பிரேமம் பட நடிகை.. ”மீன் கேர்ள்ஸ்” நாயகி அவந்திகா ஷேரிங்ஸ்!
நியூயார்க் : மீன் கேர்ஸ் இணையத் தொடரை மையமாக வைத்து உருவாகியுள்ள மீன் கேர்ள்ஸ் படத்தில் நடித்துள்ள அவந்திகா, பிரேமம் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக ஓடிடி-க்களின் அபரிதவிதமான வளர்ச்சியால் இந்திய நடிகர்கள் பலரும் ஹாலிவுட் பக்கம் சென்றுள்ளனர். ஏற்கனவே இந்திய மார்க்கெட்டை குறி வைத்து இந்திய சினிமாவின் பிரபல நடிகர்களை நடிக்க வைப்பது வழக்கமாகி வருகிறது. அப்படித்தான் கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதேபோல் சிட்டாடல் வெப் சீரிஸில் பிரியங்கா சோப்ரா, நெட்ஃபிளிக்ஸில் வெளியான பிரிட்கர்டன் படத்தில் சிமோன் ஆஷ்லி, ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்ற ஒன் டே வெப் சீரிஸில் நடித்த அம்பிகா மோட் உள்ளிட்டோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தான். இந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் அவந்திகா.
தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவை வைத்து ரீமேக் செய்யப்பட்ட பிரேமம் படத்தின் மடோனா செபஸ்டியனின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் அவந்திகா. இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பிரம்மோற்சவம் படத்தின் மூலமாக அறிமுகமாகியவர். அதன்பின் ஆக்ஸிஜன், அஞாதவாசி உள்ளிட்ட படங்களில் நடித்த அவந்திகா திடீரென ஹாலிவுட் பறந்தார்.
இந்த நிலையில் மீன் கேர்ள்ஸ் இணையத் தொடரை கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீன் கேர்ள்ஸ் படத்தில் அவந்திகா நடித்துள்ளார். கரண் ஷெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவந்திகாவின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அவந்திகா, இந்தியாவில் அதிகளவில் அழகான, திறமை வாய்ந்த பெண்கள் இருக்கிறார்கள். அவர்களின் கதைகள் சர்வதேச அளவில் சொல்லப்பட வேண்டிய தேவை இருந்தது.
அதற்கான நேரம் அமைந்துள்ளது. வரும் காலங்களில் தெற்கு ஆசியாவை சேர்ந்த பெண்கள் ஹாலிவுட்டில் நடிப்பதற்கு இன்னும் எளிதான சூழல் இருக்கும். இந்திய பெண்ணாக ஹாலிவுட்டில் வெளிச்சம் பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. எனது சினிமா வாழ்க்கையை மாற்றியது மடில்டா மற்றும் 3 இடியட்ஸ் படங்கள் தான். சினிமாவிற்கு வர வேண்டும் என்ற ஆசை ஏற்படுத்தியது மடில்டா தான்.
அதன்பின் மீன் கேர்ள்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு முன் ஆடிஷனில் பல்வேறு சம்பவங்கள் நடந்தன. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் வரை என்னால் நம்ப முடியவில்லை. நடிக்கும் போது அனைவரும் பாதுகாப்பான உணர்வை கொடுத்தார்கள். ஏனென்றால் குழப்பம், பயம், கேள்வி என்று அத்தனை உணர்வுகள் நம் மனதிற்குள் ஏற்படும். அதனை கடந்து படம் வெளியான போது நிம்மதியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











