நாக சைதன்யா - சோபிதா திருமணம் எப்போது?.. ஏன் அவசரமாக நிச்சயதார்த்தம்?.. நாகார்ஜுனா கொடுத்த விளக்கம்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகார்ஜுனாவின் குடும்பம். அவர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவை போலவே அவரது மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தண்டெல் படம் வெளியாகவிருக்கிறது.

திருமணம்: இதற்கிடையே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார் சைதன்யா. அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தெலுங்கு தேசத்தில் பெரிய வீட்டு மருமகளாக மாறினார்.
தொடர்ந்து சினிமாவில்: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட்டாக இருந்தார். அதேசமயம் சமந்தா சினிமாவில் நடிப்பதை நாகார்ஜுனாவும், அமலாவும் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடியது. இருந்தாலும் சமந்தா முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தார்.
பிரிவு: நிலைமை இப்படி இருக்க கடந்த 2021ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் - சமந்தாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா நடித்ததுதான் என்று இன்றளவும் பேச்சு இருக்கிறது. ஆனால் சைதன்யாவோ, சமந்தாவோ அதற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை. விவாகரத்துக்கு பிறகும் சமந்தாவின் கரியர் பீக்கில்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதிலிருந்து இப்போது மீண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார்.
நிச்சயதார்த்தம்: சூழல் இப்படி இருக்க நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் காதலித்துவந்தனர். அவர்களது நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்றது. அதனையடுத்து பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தனர். மேலும் சமந்தா நாக சைதன்யாவிடம் காதலை சொன்ன ஆகஸ்ட் 8ஆம் தேதிதான் நாக சைதன்யா - சோபிதாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து வேண்டுமென்றேதான் அன்றைய நாளில் நிச்சயதார்த்தத்தை வைத்திருப்பதாக பலரும் பேசினார்கள்.
நாகார்ஜுனா விளக்கம்: இந்நிலையில் மகனுக்கு நடந்த நிச்சயதார்த்தம் குறித்து பேசிய நாகார்ஜுனா, "ஆகஸ்ட் எட்டாம் தேதி ரொம்பவே நல்ல நாளாக இருந்தது. எனவேதான் அன்றைய நாளே அவசரமாக நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்தோம். சைதன்யாவும், சோபிதாவும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக நின்றதால்தான் உடனடியாக நிச்சயத்தை முடித்துவிட்டோம். இன்னும் திருமண தேதியை முடிவு செய்யவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











