பாட்டு மட்டுமல்ல.. படமே காப்பி தானா?.. குருவாயூர் அம்பலநடையில் படத்துக்கு எதிராக கிளம்பிய பிரச்சனை!
சென்னை: தமிழர்களை கவர்வதற்காக மலையாள படங்களில் தொடர்ந்து தமிழ் வசனங்களும், தமிழ் பாடல்களும் இடம்பெற்று வருகின்றன. கேரளாவில் இருந்து ஹீரோயின்களை இறக்குமதி செய்தாலும் கோலிவுட்டில் தமிழ் டப்பிங்குடன் தான் நடிகைகளை பேச வைத்து வருகின்றனர்.
ஆனால், மலையாள படங்கள் ரியாலிட்டியாக எடுக்கிறோம் என்கிற பெயரில் குறைந்த பட்ஜெட்டில் படங்களை கொடுத்து வரும் நிலையில், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கின்றன.

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் குணா படத்தில் இடம்பெற்ற "கண்மணி அன்போடு காதலன்" பாடலுக்கு காப்புரிமை செலுத்தவில்லை என இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மோசடியில் ஈடுபட்டதாகவும் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அழகிய லைலா பாட்டை ஆட்டையை போட்டு: சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ், பசில் ஜோசப், நிகிலா விமல் நடிப்பில் வெளியான குருவாயூரில் அம்பலநடையில் படத்தில் கார்த்தி, ரம்பா நடித்த உள்ளத்தை அளித்தா படத்தில் இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்த "அழகிய லைலா" பாடல் இடம்பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அந்த படத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிய காரணமே அந்த பாடல் தான் என்கிற நிலை உருவானது. தொடர்ந்து சோஷியல் மீடியாவில் அந்த பாடலையும், நிகிலா விமலை காட்டும் இடங்களையும் எடிட் செய்து போட்டே படத்தை பார்க்க வைத்து விட்டனர். ஆனால், அந்த பாடலுக்காக தனக்கு கிரெடிட்ஸ் கூட படக்குழு தரவில்லை என சிற்பி கூறியிருந்தார்.
கதையே காப்பி தானா?: இந்நிலையில், அந்த பாடலை அனுமதியின்றி சுட்டது மட்டுமின்றி படத்தையே சுட்டு விட்டார்கள் என நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் புதிய குண்டை தூக்கிப் போட்டிருக்கிறது. பாய் ஃபிரெண்ட் அலப்பறைகள் என நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீடியோ மில்லியன் கணக்கில் வியூஸ் அள்ளி ஹிட் அடித்தது. அந்த யூடியூப் வீடியோவின் கதையை படமாக்க அந்த டீம் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதே கதையை சுட்டு தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளனர் என்றும் இரு கதைகளும் ஒன்றாகவே இருப்பதாக நக்கலைட்ஸ் கிரியேட்டிவ் ஹெட் ராஜேஷ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை: ஆரம்பத்திலேயே படத்தின் டிரைலர் வரும் போதே, நம்முடைய வீடியோ மாதிரியே இருக்கிறதே என நினைத்தோம். படம் வெளியானதும் பார்த்துக் கொள்ளலாமல் என நினைத்த நிலையில், படம் வெளியானதும் அதே கதை தான் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டது. அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு மெசேஜ் அனுப்பினால் எந்தவொரு பதிலும் வரவில்லை. இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளோம் என ராஜேஷ்வர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தொடர் திருட்டு?: மலையாள திரையுலகை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கமர்ஷியலாக மாறி வரும் சூழலில் தொடர்ந்து கதை திருட்டு சர்ச்சையிலும், பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தும் சர்ச்சையிலும் மலையாள சினிமாக்கள் சிக்கி வருகின்றன. குருவாயூர் அம்பலநடையில் படத்தை இயக்கிய விபின் தாஸ் இதுதொடர்பாக இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. விரைவில், தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











