அடேங்கப்பா பத்து பேர அசால்ட்டா தூக்கி வீசுறாரே.. பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 டீசர்.. செம அலப்பறை
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் பாலகிருஷ்ணா. பாலைய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் ஃபேமஸான ஹீரோவாக வலம் வந்தாலும் சர்ச்சைகளையும் சந்திப்பவர். கடைசியாக அவரது நடிப்பில் டாக்கு மகாராஜ் படம் வெளியானது. அது தோல்வியைத்தான் சந்தித்தது. அடுத்ததாக அகண்டா படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவிருக்கும் சூழலில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கில் வெளியான சாகசமே ஜீவிதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலகிருஷ்ணா. அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சாகசமே ஜீவிதம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமானார். அந்தவகையில் 1985ஆம் ஆண்டு மட்டும் அவர் நடிப்பில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகின.
தொடர்ந்து ஹீரோதான்: அவர் நடித்த படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி ரிசல்ட்டுகளை கொடுத்தன. தோல்வி படங்கள் வந்தாலும் பாலகிருஷ்ணாவுக்கென்று ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதன் காரணமாக நூறு படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்துவிட்டார் பாலகிருஷ்ணா. இதற்கிடையே அரசியலில் என்ட்ரி ஆகி அதிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். அதுமட்டுமின்றி அரசியல்வாதியாக சில விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார் அவர்.

அதகள நாயகன்: இது ஒருபக்கமிருக்க பாலகிருஷ்ணா பொது இடங்களில் நடந்துகொள்வதும் சர்ச்சையையும் பரபரப்பையும் கூட்டுபவை. ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய காலணியை அணிவிக்க சொல்லி உதவியாளர் ஒருவரை அடித்தது, தன்னுடன் செல்ஃபி எடுக்க வருபவர்களின் மொபைல் ஃபோன்களை தட்டிவிடுவது என அவரது ஒவ்வொரு செயல்பாடும் அதகளமாகத்தான் இருக்கும். அதனை வைத்து சமூக வலைதளவாசிகள் மீம்ஸ்களையும் பறக்கவிடுவார்கள்.
ஜெயிலர் 2: தெலுங்கில் பல படங்களில் நடித்தாலும் தமிழில் அவர் அறிமுகமாகாமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார். தமிழில் அதுவும் ரஜினியுடன் பாலகிருஷ்ணா நடிப்பதால் அவருக்கு கண்டிப்பாக வெயிட்டான சீன்களை இயக்குநர் வைத்திருப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.
டாக்கு மகாராஜ்: அவரது நடிப்பில் கடைசியாக டாக்கு மகாராஜ் திரைப்படம் வெளியானது. பாபி கொல்லி இயக்கியிருந்த அந்தப் படத்தில் பாலைய்யாவுடன் பாபி தியோல், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஊர்வசி ரவுத்தாலாவுடன் ஒரு பாடலுக்கு செமயான ஆட்டமும் போட்டிருந்தார் அவர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது நெகட்டிவ்வான விமர்சனங்களையே கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகண்டா 2: இந்நிலையில் அடுத்ததாக அவரின் நடிப்பில் அகண்டா 2 வெளியாகவிருக்கிறது. இன்று அதன் டீசர் வெளியாகியிருக்கிறது. அந்த டீசரை பார்க்கையில் கண்டிப்பாக இதுவும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது. பனி மலை ஒன்றில் கிட்டத்தட்ட பத்து பேரை அசால்ட்டாக தூக்கி வீசுகிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பாலைய்யா செம அலப்பறை போட்டிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். ஏற்கனவே இதன் முதல் பாகம் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பைத்தான் பெற்றது. எனவே அதன் தொடர்ச்சியாக வெளியாகும் இதுவும் ஹிட்டடிக்கும் என்று பாலைய்யாவின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











