ருத்ரமாதேவி, பிரபாசுக்கு விருது இல்லையா? - அக்கட தேசத்தில் ஒரு அவார்டு சர்ச்சை
ஹைதராபாத்: ஆந்திர அரசு நந்தி விருதுகளை வழங்கியதில் பாரபட்சம் காட்டியுள்ளதாக தெலுங்கு திரைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறந்த படம், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் வழங்கும் நந்தி விருதுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. 2014 முதல் 2016 வரை மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சந்திரபாபு நாயுடுவின் உறவினரான பாலகிருஷ்ணா நடித்த 'லெஜண்ட்' படத்துக்கு 9 விருதுகள் வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. விருதுக்கான தேர்வு குழுவில் பாலகிருஷ்ணா, நடிகை ஜீவிதா ஆகியோரும் நடுவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகிருஷ்ணா நடுவராக இருந்து, அவர் நடித்த படத்துக்கே 9 விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு இயக்குநர்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
''நந்தி விருதுக்கு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்படவில்லை. சிரஞ்சீவியின் சகோதரன் மகன் வருண்தேஜா நடித்த முகுந்தா சிறந்த படமாக பாராட்டப்பட்டது. அந்த படத்துக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்தவர்களில் சிரஞ்சீவிக்கு மட்டும் சிறப்பு விருது தந்து, மற்றவர்களைப் புறக்கணித்துள்ளனர்," என்கிறார் இயக்குநர் பன்னிவாசு.
அனுஷ்காவை வைத்து ருத்ரமாதேவி சரித்திர படத்தை எடுத்த குணசேகரும் நந்தி விருதுகளை விமர்சித்துள்ளார். "பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு ருத்ரமாதேவி படத்தை எடுத்தேன். இந்த படத்துக்கு வரி விலக்கு கேட்டபோது அரசு தரவில்லை. ஆனால் பாலகிருஷ்ணா நடித்த கவுதமி புத்ர சாதகர்னி படத்துக்கு ஆந்திர அரசும் தெலுங்கானா அரசும் வரி விலக்கு அளித்தன. இதை நான் கண்டித்ததால் ருத்ரமாதேவி படத்துக்கு நந்தி விருதுகள் அளிக்காமல் ஒதுக்கி விட்டனர். இதில் கஷ்டப்பட்டு நடித்து இருந்த அனுஷ்காவுக்கும் விருது வழங்கவில்லை. பாலகிருஷ்ணாவின் லெஜன்ட் படத்துக்கு 9 விருதுகள் கொடுத்து ஓரவஞ்னை செய்துவிட்டார்கள்,'' என்றார்.
இயக்குநர் நாகேந்திரா கூறும்போது, ''நந்தி விருதுகள் தேர்வு நியாயமாக நடக்கவில்லை. பாகுபலி படத்தில் கதாநாயகனாக கஷ்டப்பட்டு நடித்த பிரபாசுக்கு விருது கொடுக்காதது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.


Click it and Unblock the Notifications











