படங்களை சென்சார் செய்வதில் ரேட்டிங் முறை... நந்திதா தாஸ் ஆலோசனை!
மும்பை: படங்களை தணிக்கை செய்வதில் தரமதிப்பீடு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று நடிகை நந்திதா தாஸ் ஆலோசனை கூறியுள்ளார்.
தணிக்கை அமைப்பு முறை மாற்றம் குறித்து அவர் கூறுகையில், "ஒரு படத்தைத் தணிக்கை செய்வது என்பது ஆபத்தான வழிமுறை.

ஏனெனில் 5, 6 பேர் சேர்ந்து பல கோடி பேர் என்ன பார்க்கவேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். எனக்குப் பிடிப்பது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். மற்றவர்களுக்குப் பிடிப்பது எனக்குப் பிடிக்காமல் போகலாம். மக்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
இப்போது இணையத்தில் எல்லாமே பார்க்கமுடியும். அதனால்தான் தணிக்கை அமைப்பின் விதிமுறைகளை மாற்றுவதற்காக ஷியாம் பெனகல் தலைமையில் குழு ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. படத்தைத் தணிக்கை செய்வதில் தரமதிப்பீடு (ரேட்டிங்) முறையைக் கொண்டுவரவேண்டும். இதனால் எது சரி, எது தவறு என்று 5 தனிப்பட்ட நபர்கள் சேர்ந்து முடிவெடுக்கும் முறை மாற்றப்படும்.
பெண்களைத் தவறான முறையில் காண்பித்த பல படங்கள் தணிக்கை செய்யப்படாமல் வெளிவந்துள்ளன. அதேபோல, நம்மை பல தலைமுறைக்குப் பின்னால் கொண்டுசெல்லும் வன்முறைக் காட்சிகளும் வசனங்களும் கொண்ட படங்களும்கூட சரியாகத் தணிக்கை செய்யப்படவில்லை. எனக்குப் பிடிக்காது என்பதற்காக ஒரு படம் தணிக்கை செய்யப்படவேண்டும் என்று சொல்லவில்லை. எல்லாவிதமான படங்களும் வெளிவரவேண்டும். எது சரி, எது தவறு என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











