நெப்போலியன் செம நிம்மதி.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மகன் தனுஷ்.. குவியும் வாழ்த்து
சென்னை: நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கும் அக்ஷயா என்பவருக்கும் கடந்த வருடம் ஜப்பானில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணம் முதலில் அமெரிக்காவில்தான் நடப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக ஜப்பான் நாட்டுக்கு மாற்றப்பட்டது. அந்தத் திருமணத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் நெப்போலியன் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என கலக்கியவர் நெப்போலியன். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்துக்கு வில்லனாகவும் தோன்றியிருக்கிறார். வாட்டசாட்டமான உருவத்துடன் அவர் திரையில் தோன்றும்போது பலர் அவரை ரசிக்கவே செய்தார்கள். நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்திய அவர் மத்திய இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெப்போலியனின் குடும்பம்: நெப்போலியனுக்கு தனுஷ், குணால் எனும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருந்ததை அவர் பிறந்த சில வருடங்களுக்கு பிறகு கண்டறிந்தார்கள். உடனடியாக அவருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அவருக்கு பெரிய பலனை கொடுக்கவில்லை. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு சென்று மகனுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று நெப்போலியன் முடிவு செய்தார்.
அமெரிக்காவில் நெப்போலியன்: அதன்படி தனது குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு தனுஷுக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமின்றி சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றையும் தொடங்கினார். அதில் தனுஷ் முக்கிய பொறுப்பும் வகித்துவருகிறார். அதேபோல் சாஃப்ட்வேர் நிறுவனம் மட்டுமின்றி ஏக்கர் கணக்கில் அங்கு விவசாயமும் செய்துவருகிறார். சூழல் இப்படி இருக்க தனது மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவரும், அவரது மனைவியும் முடிவெடுத்தார்கள்.
ஜப்பானில் திருமணம்: அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் ஜப்பானில் கடந்த வருடம் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அந்தத் திருமணத்தில் குஷ்பூ, மீனா,ராதிகா, சரத்குமார், கலா மாஸ்டர், பாண்டியராஜன் என பலர் கலந்துகொண்டார்கள். சிவகார்த்திகேயன் வீடியோ மூலம் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனுஷிடம் பேசியதாகவும் அப்போது சில தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன.
செம கொண்டாட்டம்: திருமணத்துக்கு பிறகு தனுஷும், அக்ஷயாவும் மகிழ்ச்சியோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். குடும்பத்தினருடன் வெளிநாடுகளில் சுற்றுலாவும் செய்துவருகிறார்கள். அந்தவகையில் அவர்கள் இப்போது மலேசியாவில் இருக்கிறார்கள். இந்நிலையில் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், தனுஷுக்கும், அக்ஷயாவுக்கும் திருமணம் முடிந்து நூறு நாட்கள் ஆகிவிட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தனுஷுக்கு அக்ஷயா காதலோடு கேக்கும் ஊட்டிவிடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதே நிம்மதியோடு இருங்கள் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











