மூணு மாசத்துக்கு முன்னாடிகூட பேசுனாரு.. இப்படி ஆகிப்போச்சே.. பாரதிராஜாவை நினைத்து கதறும் நெப்போலியன்
சென்னை: நடிகர் நெப்போலியனை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. இப்போது தன்னுடைய குருநாதர் உயிரிழந்ததை அடுத்து நொறுங்கி போன இதயத்துடன் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ முழுக்க தனது வாழ்க்கையில் பாரதிராஜா எவ்வளவு இருந்திருக்கிறார் என்பதை பேசியிருக்கிறார்.
பாரதிராஜா நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவருக்கும் மாதிரியே நெப்போலியனுக்கும் உச்சக்கட்ட சோகத்தை கொடுத்திருக்கிறது. அமெரிக்காவில் இருப்பதால் அவர் வர முடியாமல் திணறுகிறார். எவ்வளவோ முயன்றும் வர முடியாததால் உருக்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், 'என் குருநாதர் பாரதிராஜா இயற்கை எய்திவிட்டார் என்று காலை எனக்கு அதிர்ச்சி செய்தி வந்தது. சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நான் அடிக்கடி அவரது மகள் ஜனனியிடம் ஃபோன் செய்து பேசுவேன்.

வதந்தினு நினைச்சேன்: அப்போது அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்பேன். இந்த செய்தியை கேட்டவுடன் இது பொய், வதந்தி என்றுதான் நினைத்தேன். ஒரு மாதத்துக்கு முன்புகூட இதே மாதிரி ஒரு செய்தி வந்தது. ஜனனிக்கு ஃபோன் செய்து கேட்டேன். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை அங்கிள். அப்பா நல்லா இருக்கிறார். யாரோ வதந்தி பரப்பிட்டார்கள்' என கூறினார். அதேமாதிரிதான் இதுவும் இருக்கும் என்று நான் நினைத்தேன்.
உறுதியான தகவல்: ஜனனிக்கு ஃபோன் செய்து கேட்டேன். அவங்களோ, 'அங்கிள் நான் மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். அப்பா தவறிட்டார்' என கூறிய பிறகுதான் இந்த செய்தியை என்னால் உறுதி செய்ய முடிந்தது. இந்த செய்தியை கேட்டதிலிருந்தே என் வீட்டில் யாராலும் இதை நம்ப முடியவில்லை. நேற்று இரவு முழுவதும் இதை பற்றிய செய்தியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். தூக்கமே வரவில்லை.
முதல் ஆளாக நின்றிருப்பேன்: அவரது இறுதிச்சடங்கு தேனியில் நடப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் இரண்டு வருடங்களாக அமெரிக்காவிலிருந்து இந்தியா வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். இல்லையென்றால் என் குருநாதரோட இறுதி யாத்திரையில் முதல் ஆளாக நான் வந்து நின்றிருப்பேன். எனது வாழ்க்கையில் எல்லாமே குருநாதர்தான். அவர் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மகன் திருமணத்துக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தவரைக்குமே எங்களுக்குள் உறவு பலமாக இருந்தது.
இனி பார்க்கவே முடியாது: இயக்குநர் சிகரத்திற்கு நிகராக தமிழ் திரையுலகத்தை ஆண்டவர். அவருடைய படைப்புக்கள் எல்லாம் அரிதானவை. யாராலும் அதை திரும்ப கொடுக்க முடியாது. அவர் மாதிரி ஒரு நல்ல மனிஅதை இனி பார்க்கவும் முடியாது. என்னை மாதிரி எத்தனையோ கலைஞர்களை அறிமுகப்படுத்தி வளர்த்து ஆளாக்கியவர். மூன்று மாதங்களுக்கு முன்புகூட என்னிடம் ஃபோனில் நன்றாக பேசினார். நான்கூட அடுத்த மாதமோ இல்லை இரண்டு மாதங்களிலோ நேரில் அவரை பார்த்திட வேண்டுமென நினைத்தேன். ஆனால் அதற்கு இப்படி ஆகிவிட்டது. குடும்பத்தின் சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
