சரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிய உத்தரவு.. எஸ்பி அலுவலகத்திற்கு நாசர் வந்ததால் பரபரப்பு!
சென்னை : நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பொதுக்குழுவின் அனுமதி பெறாமல் முறைகேடாக விற்பனை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி நீதிமன்றம், முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வேங்கட மங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக 26 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் அனுமதியின்றி சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகள் விற்றதாக புகார் எழுந்தது.

அனுமதியின்றி நடிகர் சங்க நிலத்தை விற்றது தொடர்பாக சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்போதைய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் வடக்கு மண்டல ஐ.ஜி-யிடம் புகார் அளித்தார். ஆனால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கில் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காஞ்சிபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதையடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நில விற்பனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார் தற்போதைய நடிகர் சங்கத் தலைவர் நாசர்.
நாசர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவிருக்கிறது. நாசர் திடீரென காஞ்சிபுரம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











