இன்னொரு உன்னத கலைஞரையும் வாரிச் சென்ற கொரோனா.. தேசிய விருது பெற்ற கதாசிரியர் காலமானார்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரும், எழுத்தாளரும், தேசிய விருது வென்ற கதாசிரியருமான மாதம்பு குஞ்சுக்குட்டன் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79.
இந்தியாவை சூறையாடி வரும் கொரோனா இரண்டாம் அலை ஏகப்பட்ட சினிமா பிரபலங்களையும் தொடர்ந்து வாரிக் கொண்டு செல்கிறது.
இந்நிலையில், தற்போது மலையாள திரையுலகின் மூத்த நடிகரும், சிறந்த கதாசிரியருமான மாதம்பு குஞ்சுக்குட்டனின் மறைவு மலையாள திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறி உள்ளது.

சோகத்தில் திரையுலகம்
ஆயிரக் கணக்கான பொது மக்கள் நம் நாட்டில் கொரோனாவுக்காக பலியாகி வரும் நிலையில், தினம் தோறும் அவர்களுடன் சேர்த்து சில சினிமா பிரபலங்களும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

மாதம்பு குஞ்சுக்குட்டன்
1941ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கேரளாவின் திருச்சூரில் உள்ள மாதம்பு மனா எனும் இடத்தில் பிறந்தவர் மாதம்பு குஞ்சுக்குட்டன். எழுத்தாளராகவும், நடிகராகவும், சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் உருவாக காரணியாக இருந்தவர் இவர்.

தேசிய விருது
கடந்த 2000ம் ஆண்டு வெளியான கருணம் படத்திற்கு சிறந்த திரைக்கதை எழுதியதற்காக தேசிய விருதை பெற்றார் மாதம்பு குஞ்சுக்குட்டன். ஜெயராஜ் இயக்கத்தில் பிஜு மேனன் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் மாதம்பு குஞ்சுக்குட்டனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

கொரோனா மரணம்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், திரிச்சூரில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.

பிருத்விராஜ் இரங்கல்
சமூக வலைதள டைம் லைன் முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் இடமாக மாறி வருகிறது. இந்த நிலை கூடிய சீக்கிரமே மாற வேண்டும். மலையாள திரையுலகின் சிறந்த கலைஞர் மாதம்பு குஞ்சுக்குட்டனையும் தற்போது இழந்து தவித்து வருகிறோம் என நடிகர் பிருத்விராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications