National Awards 2022: முதல் தேசிய விருதை பெற்ற சூர்யா... ஆனந்த கண்ணீர் வடித்த ஜோதிகா...
டெல்லி: 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
தமிழில் சூரரைப் போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய 3 திரைப்படங்கள் மொத்தம் 10 விருதுகளை வென்றுள்ளன.
சூர்யா சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை சூரரைப் போற்று படத்திற்காக பெற்றார்.

68வது தேசிய திரைப்பட விருதுகள் விழா
68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில்.உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில், தமிழில் இருந்து சூர்யா, ஜிவி பிரகாஷ் குமார், சுதா கொங்கரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி, அதிலிருந்து சிறந்த படங்களுக்கும், அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழில் மொத்தம் 10 விருதுகள்
தமிழ்ப் படங்களில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் மொத்தம் 5 விருதுகளை வென்றது. சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த பின்னணி இசை ஜி.வி. பிரகாஷ், சிறந்த திரைக்கதை, சிறந்த படம் ஆகிய 5 மிக முக்கியமான விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல் வசந்த் இயக்கிய 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' சிறந்த தமிழ் மொழிப் படத்துக்கான தேசிய விருதை வென்றது. மேலும், அதே படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை லக்ஷ்மியும், சிறந்த எடிட்டிங்கிற்காக ஸ்ரீகர் பிரசாத்தும் தேசிய விருது வென்றுள்ளனர். சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த வசனகர்த்தா என இரண்டு விருதுகளை 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் வென்றுள்ளார்.

முதல் தேசிய விருதை வென்ற சூர்யா
'நேருக்கு நேர்' மூலம் சினிமாவில் அறிமுகமான சூர்யாவின் நடிப்பு மீது ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. அத்தனை தடைகளையும் கடந்து தமிழில் இன்று டாப் ஹீரோவாக ஜொலித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில், 2020ல் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனது கைகளில் வாங்கினார் சூர்யா. தேசியவ் விருது வழங்கும் விழாவில் மனைவி ஜோதிகா, மகள், மகன் ஆகியோருடன் கலந்துகொண்டார் சூர்யா. வெள்ளை நிற பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில் கெத்தாக மேடையேறிய சூர்யா, தனது முதல் தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார். சூர்யா தேசிய விருது பெற்றுக்கொண்டதை பார்த்த ஜோதிகா, தனது மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீர் வடித்து வெளிப்படுத்தினார்.

நெடுமாறன் ராஜாங்கத்தை மறக்க முடியுமா?
ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு வெளியான சூரரைப் போற்று படத்தில், சூர்யா நெடுமாறன் ராஜங்கம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அசுரத்தனமான நடிப்பால் மிரள வைத்த சூர்யா, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது தனித்துவமான நடிப்பால் தேசிய விருதை வென்றுள்ள சூர்யாவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











