இப்படித்தான் தேசிய விருதுக்கான படங்கள் தேர்வாகின்றன.. தேசிய விருது நடுவர் குழு உறுப்பினர் ஓபன் டாக்!
சென்னை: தேசிய விருதுகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்ற மர்மத்தை உடைக்கிறார் நடுவர் குழு உறுப்பினரும் இயக்குநருமான கெளரவ் நாராயணன். "சில படங்கள் தேசிய விருதுக்கு விண்ணப்பித்திருப்பதைப் பார்த்து சிரித்திருக்கிறோம்!" என்று அவர் வெளிப்படையாகக் கூறியது ஆச்சரியத்தை அளிக்கிறது.
சினிமா பின்னணி, சமூக விழிப்புணர்வு படங்கள் மூலம் கவனம் பெற்ற கெளரவ் நாராயணன், தேசிய விருது நடுவர் குழுவில் இடம்பெற்ற அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுவே அவரது முதல் அனுபவம், அதுவும் இளைய நடுவர் குழு உறுப்பினர் என்ற பெருமையுடன் இதை அவர் அணுகுகிறார். தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி தெளிவுபடுத்துகிறார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) மூலம் பரிந்துரைக்கப்பட வேண்டும். சென்சார் போர்டு சான்றிதழ் பெற்ற எந்த இந்தியப் படமும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானது என்கிறார்.300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடுவர் குழு பார்த்தாக வேண்டும். பிராந்திய குழுக்கள் திரைப்படங்களை பிரித்து மதிப்பீடு செய்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து நடுவர்கள் இருப்பார்கள். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் 'தெற்கு ஒன்று' பிரிவின் கீழ் வருகின்றன. அதிக படங்கள் இவ்விரு மொழிகளிலுமே இருந்து எப்போதும் முக்கியமான விருதுகளை வெல்கின்றன என்றார். நடுவர் குழுவின் மதிப்பீட்டு முறை வெளிப்படையானது. ஒவ்வொரு படத்திற்கும் தொழில்நுட்ப விவரங்கள், விருதுக்கான பிரிவுகள் கொடுக்கப்படும். நடுவர்கள் தனித்தனியாக மதிப்பெண் அளிப்பார்கள். இறுதியில் அதிக மதிப்பெண் பெற்ற 10 படங்கள் அடுத்த சுற்றுக்கு அனுப்பப்படும். எந்த ஒரு சார்பும் இல்லாமல் நியாயமான முறையில் மதிப்பீடு செய்யப்படுகிறது என்கிறார்.
விருதுகளைப் பெறும் படங்கள் மக்களின் வாழ்வாதாரம், உணர்வுகளைப் பேச வேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி பாக்ஸ் ஆபிஸ் வசூலை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது. தேசிய ஒருமைப்பாடு, மனிதநேயம் போன்ற விழுமியங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதே நடுவர் குழுவின் முக்கிய அளவுகோல் என்கிறார் கெளரவ். "ஆடுகளம் படத்திற்கு பிறகு ஒரே படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது அரிது." என்று குறிப்பிட்ட கெளரவ், சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஊர்வசிக்கு பாராட்டு தெரிவித்தார். திறமையான கலைஞர்களை அங்கீகரிப்பதில் நடுவர் குழு கவனம் செலுத்துகிறது என்பதை இது காட்டுகிறது. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தியதற்கான காரணத்தையும் கூறுகிறார். நல்ல கதையம்சம், தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள் அமைந்தால் மீண்டும் இயக்குநராக களமிறங்கத் தயார். ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். மேலும், தேசிய விருதுகள் குறித்து பலருக்கும் இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தியதுடன், தமிழ் சினிமா தொடர்ந்து தேசிய அளவில் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கெளரவ் நாராயணன் என சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











