மூவர்ண கொடி போர்த்தி முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. விடைபெற்றார் திலீப் குமார்!
மும்பை: உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். அவருக்கு வயது 98.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் முதல் ஏகப்பட்ட பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
இந்திய அரசின் மூவர்ண கொடி போர்த்தி முழு அரசு மரியாதையுடன் நடிகர் திலீப் குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் திலீப் குமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த பல்மோனாலாஜிஸ்ட் மருத்துவர் ஜலீல் பர்கர் திலீப் குமாரின் உயிர் பிரிந்த செய்தியை உறுதி செய்தார்.

ஜூஹுவில் இறுதிச்சடங்கு
மும்பையின் முக்கிய பகுதியான ஜூஹு குப்ரஸ்தானில் மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என கடைசியாக திலீப் குமாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் போடப்பட்டு இருந்தது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கண்ணீர் மல்க அந்த கலை மேதைக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அமிதாப் முதல் ரன்பீர் வரை
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் முதல் இளம் நடிகர் ரன்பீர் கபூர் வரை ஏகப்பட்ட பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இந்தியளவில் அனைத்து திரை பிரபலங்களும் திலீப் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்ட்ரா முதல்வர்
மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், மகாராஷ்ட்ரா அரசு சார்பாக முழு அரசு மரியாதையுடன் திலீப் குமாரின் உடலை நல்லடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

மூவர்ண கொடி போர்த்தி
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளை பெற்ற ஒரு மிகப்பெரிய திரைக் கலைஞன் மறைந்த நிலையில், அவருக்கு செலுத்த வேண்டிய கடைசி மரியாதையாக இந்திய அரசின் மூவர்ண கொடி போர்த்தி முழு அரசு மரியாதையுடன் மாலை 5 மணிக்கு திலீப் குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. விடைபெற்றது ஒரு பெரிய சினிமா சகாப்தம்.


Click it and Unblock the Notifications











