நீங்களும் மனுஷங்கதான்.. ஏன் இப்படி செய்றீங்க?.. நவரச நாயகன் கார்த்திக் ரொம்ப ஃபீல் பண்றாரு
சென்னை: நவரச நாயகன் கார்த்திக் கடந்த வருடத்தின் இறுதியில் திடீரென அனைவது மத்தியிலும் பேசு பொருளானார். இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் அவர் பற்றி பேசியதுதான் அதற்கு காரணம். அந்த விவகாரம் முடிந்த கையோடு கார்த்திக்கிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் வதந்தி பரவியது. ஆனால் அவர் தான் நலமுடன் இருப்பதை உணர்த்தும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார். அப்போதிருந்து வாரத்துக்கு இரண்டு வீடியோக்களையாவது அவர் வெளியிட்டுவிடுகிறார்.
நவரச நாயகன் கார்த்திக் அதீத திறமையுடையவர். எந்த கேரக்டராக இருந்தாலும் அசால்ட்டாக செய்துவிடக்கூடிய அவர்; தனது நடிப்பில் எதார்த்தத்தை மீறாதவர். இதனாலேயே அவரை பெண்களும், ஆண்களும் ரொம்பவே அதிகமாக ரசித்தார்கள். மணிரத்னம் உள்ளிட்ட லெஜெண்ட் இயக்குநர்களின் இயக்கத்தில் எல்லாம் நடித்துவிட்டார். ஒருகட்டத்தில் கமலைவிடவும் கார்த்திக்கிற்கு அதிக பெண் ரசிகைகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு திருமணங்கள்: அவரது பெர்சனல் வாழ்க்கை கொஞ்சம் சர்சைக்குரிய ஒன்றாகும். முதலில் சோலைக்குயில் படத்தில் நடித்தபோது அதன் நாயகி ராகிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் இப்போது நடிகராக இருக்கும் கௌதம் கார்த்திக். யாருமே எதிர்பார்க்காதபடி ராகிணியின் சொந்த தங்கையான ரதி என்பவரையும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அவர். அந்த சமயத்தில் பெரிய விவாதத்தை அது கிளப்பியது.

பாரதி கண்ணனால் சென்சேஷனல்: கார்த்திக்கின் பெர்சனல் வாழ்க்கை மட்டுமின்றி திரைத்துறை வாழ்க்கையும் சர்ச்சையான ஒன்றுதான். சொன்ன தேதி, நேரத்தில் ஷூட்டிங்கிற்கு வராமல் ஏகப்பட்ட சேட்டைகளை செய்திருக்கிறார். அது அப்போதைக்கு ஊடகங்கள் பெரிதாக இல்லாததால் வெளியே தெரியாமல் போய்விட்டது. அப்போது அவர் செய்த விஷயங்களை எல்லாம் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் பேசி வைக்க; மீண்டும் சென்சேஷனல் ஆனார் கார்த்திக்.
உடல்நலம் பற்றிய வதந்தி: பாரதி கண்ணனின் பேச்சு நவரச நாயகனின் ரசிகர்களை அப்செட் ஆக்க; அவர்கள் ஃபோன் செய்து தங்களது ஆதங்கத்தை எல்லாம் வெளிப்படுத்தினார்கள். இது ஒரு பக்கம் இருக்க கார்த்திக்கிற்கு உடல்நிலை சுத்தமாக சரியில்லை; வீல் சேரில்தான் இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதனை மகன் கௌதம் கார்த்திக் மறுத்தார். நவரச நாயகனும் மாடியில் நின்று கம்பி சுற்றும்படி வீடியோவையும் வெளியிட்டு; தனது உடல்நலத்துக்கு ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்தார்.
புதிய வீடியோ: அப்போதிருந்து தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக்கியிருக்கிறார். அந்தவகையில் லேட்டஸ்ட்டாக வெளியிட்டிருக்கும் வீடியோவில், "சந்தோஷத்தோடு இருக்க வேண்டிய இந்த பூமியை எப்படியாவது கெடுத்துவிட வேண்டும் என்ற முடிவோடு சிலர் இருக்கிறார்கள். எந்த பூமி அவர்களை உருவாக்கியதோ அதை பாம் போட்டு அழிக்கிறார்கள். நியூக்ளியர் பட்டனை எப்படியாவது அழுத்திவிட வேண்டும் என வெளிநாட்டு தலைவர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஏன்?. எல்லாமே இங்கே நல்லா இருக்கு.
நாம் மட்டும் அனுபவித்தால் போதுமா. முன்னோர்களும் அனுபவித்தார்கள். போர்களை எல்லாம் விடுங்கள். எதிர்கால சந்ததியினரும் இந்த பூமியை அனுபவிக்க வேண்டும்தானே. அந்த எண்ணம் ஏன் வரவில்லை. எதற்காக அணுகுண்டுகளை எல்லாம் கண்டுபிடித்தீர்கள். இரண்டாவது உலகப்போர் ஒன்று போதாதா?. ஹிரோஷிமாவில் ஒன்று, நாகசாகியில் ஒன்று. அதெல்லாம் கொடுமை. மீண்டும் அதை நோக்கித்தான் போகிறார்கள். நீங்களும் மனிதர்கள்தானே. ஏன் இப்படி செய்கிறீர்கள். இதையெல்லாம் விடுங்க ப்பா" என்றார்.


Click it and Unblock the Notifications











