“நீங்களும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவர் தானே”.. ராதாரவியின் அசிங்கமான பேச்சுக்கு நயன்தாரா கண்டனம்
தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பாக ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நயன்தாரா.
Recommended Video

சென்னை: கொலையுதிர்காலம் பட விழாவில் தன்னைப் பற்றி ராதாரவி தரக்குறைவாக பேசியது தொடர்பாக தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.
நடிகை நயன் தாரா நாயகியாக நடித்துள்ள படம் கொலையுதிர்காலம். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நயன் மற்றும் அப்பட இயக்குநர் போன்றோர் கலந்து கொள்ளவில்லை.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நயன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ராதாரவியை திமுகவில் இருந்து அக்கட்சித் தலைவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா தனது கண்டனத்தையும், திமுக தலைவருக்கு நன்றியையும் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

காலத்தின் கட்டாயம்:
அந்த அறிக்கையில் அவர், "பொதுவாக நான் செய்தியாளர் சந்திப்போ, பத்திரிகை அறிக்கைகளோ தருவதில்லை. ஆனால் தற்போது அந்தக் கட்டாயத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறேன்.

ஸ்டாலினுக்கு நன்றி:
முதலில் இந்த விவகாரம் தொடர்பாக ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராதாரவியும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் தான். ஆனால், அவர் இப்படி பெண்களைப் பற்றி தவறாகப் பேசுவது வருத்தமளிக்கிறது.

தவறான முன்னுதாரணம்:
ஒரு மூத்த நடிகரான அவர் இளம் நடிகர்களுக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ தவறான உதாரணமாக இருக்கிறார். பெண்களுக்கு இது ஒரு மோசமாக காலகட்டம். இதுபோன்ற ஆண்களால் எல்லா தரப்பு பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

மிக அதிர்ச்சி:
விளம்பரத்திற்காக ராதாரவி போன்ற நடிகர்கள் இது போன்ற இழிவான, தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதில் அதிர்ச்சி என்னவென்றால், ராதாரவியின் பேச்சைக் கேட்டு பார்வையாளர்களும் கைதட்டியது தான்.

ரசிகர்களுக்கு கோரிக்கை:
இது மாதிரியான தரக்குறைவான பேச்சை பார்வையாளர்கள் ரசிப்பதால், ஆணாதிக்க சிந்தனையாளர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். எனது ரசிகர்கள் இதனை ஊக்குவிக்கக் கூடாது. எனது கண்டனத்தையும், ராதாரவிக்கு எதிரான போராட்டத்தையும் நான் வலியுறுத்துகிறேன்.

குழு தேவை:
எதிர்மறையான கருத்துக்களையும் மீறி கடவுள் எனக்கு நல்ல வாய்ப்புகளைத் தந்து வருகிறார். நான் தொடர்ந்து சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என எனக்கான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டே தான் இருப்பேன். நடிகர் சங்கத்திற்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், உச்சநீதிமன்ற வேண்டுகோள் படி, நடிகர் சங்கம் பெண்களுக்கெதிரான புகார்களை ஆய்வு செய்ய ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்பது தான்.

நல்ல உள்ளங்களுக்கு நன்றி:
எனக்கு ஆதரவாக நின்ற நல்ல உள்ளங்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மீண்டும் எனது பணியை பார்க்க தொடர்கிறேன்" என இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











