கண்ணீர் வெள்ளத்தில் பூர்ணிமா பாக்யராஜ்.. முத்தம் கொடுத்து ஆறுதல் சொன்ன நயன்தாரா.. சாந்தனுவை தேற்றிய விக்கி!
சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் தொடர்ந்து நேரில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர், இயக்குநர் விக்னேஷ் சிவனும் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
பாக்யராஜின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவரது மனைவியும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜை சந்தித்த நயன்தாரா, சில நிமிடங்கள் பேச முடியாமல் மிகுந்த சோகத்துடன் நின்றார். பூர்ணிமாவின் முகத்தை நேராக பார்த்துக்கூட ஆறுதல் சொல்ல முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்ட நயன்தாரா, தொடர்ந்து அவருக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார்.

உணர்ச்சிப்பெருக்கில் முத்தம்: ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போன நயன்தாரா, கண்ணீருடன் பூர்ணிமாவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவரது நெற்றியில் அன்புடன் முத்தமிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று தேற்றியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அந்த உருக்கமான தருணம் அங்கு கூடியிருந்த பலரது கண்களையும் கலங்க வைத்தது.
சாந்தனுவுக்கு ஆறுதல் சொன்ன விக்கி: அதேநேரம், நடிகரும் பாக்யராஜின் மகனுமான சாந்தனுவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். தந்தையை இழந்த துயரத்தில் இருந்த சாந்தனுவிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன், அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

'ஹாய்' படத்தில் இணைந்த பாக்யராஜ் - நயன்: நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படத்தில் கே. பாக்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தின் புகைப்படங்களிலும், படப்பிடிப்பு தளத்திலும் பாக்யராஜ், நயன்தாரா, கவின் ஆகியோர் ஒன்றாக இருந்த தருணங்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தன. அந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கும் நிலையில், அவரது மறைவு செய்தி நயன்தாராவை பெரிதும் பாதித்ததாக திரையுலகினர் கூறி வருகின்றனர்.
பாக்யராஜின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படும் நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த திரையுலக பிரபலங்களின் உணர்ச்சிகரமான தருணங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, நயன்தாரா - பூர்ணிமா பாக்யராஜ் இடையே நடந்த இந்த நெகிழ்ச்சியான தருணம் பலரது மனதையும் கனக்கச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications