வாழ்க்கையை அழித்தால் உங்களுக்கு வட்டியுடன் வரும்..தனுஷ் டைவர்ஸை விமர்சித்த நயன்தாரா..இப்போ ஓயாதோ
சென்னை: தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடந்த விவாகரத்துதான் கோலிவுட்டின் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. இதற்கிடையே அவருக்கும், நயன்தாராவுக்கும் நடந்த பிரச்னையும் பூதாகரமாக வெடித்தது. மேலும் நயனுக்கு எதிராக தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று ரசிகர்களிடையே ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷும் நயன்தாராவும் யாரடி நீ மோகினி படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அப்போதிருந்து இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. மேலும் சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்திருந்த எதிர்நீச்சல் திரைப்படத்திலும் பணமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக்கொடுத்தார் நயன். ஆனால் அவர்களுக்கிடையே இருந்த நட்பில் விரிசலை உண்டாக்கியது விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் திரைப்படம். அந்தப் படத்திலிருந்துதான் நயனுக்கும், விக்னேஷுக்கும் காதல் மலர்ந்தது.

எகிறிய பட்ஜெட்: நானும் ரௌடிதான் படத்துக்கு தனுஷ் மொத்தம் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டாக கொடுத்திருந்தார் எனவும்; ஆனால் விக்னேஷ் சிவனோ அதனை 16 கோடி ரூபாய்வரை கொண்டு சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. அதற்கு காரணம் படப்பிடிப்பில் அவர் கவனம் செலுத்தாமல் நயனின் மீதான காதலை வளர்ப்பதில் கவனம் செலுத்திவிட்டார். படம் ஹிட்தான் என்றாலும் பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்திவிட்டதால் விக்னேஷ் சிவன் மீது தனுஷ் கடுப்பில் இருந்ததாக கூறப்பட்டது.
கிளம்பிய பிரச்னை: நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் வந்தது. அதனையொட்டி அவரது வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் மற்றும் நயன் - விக்கி திருமண காட்சிகளை வைத்து ஒரு டாக்குமெண்ட்டரி உருவானது. அதில் நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜுகளை பயன்படுத்த தனுஷிடம் அவர்கள் அனுமதி கேட்டார்கள். ஆனால் தனுஷ் தர மறுத்துவிட்டார். அதனையடுத்து அந்த ஆவணப் பட ட்ரெய்லரில் மூன்று நொடிகள் வரக்கூடிய நானும் ரௌடிதான் ஃபுட்டேஜ் இடம்பெற்றிருந்தது.
பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு: இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனுஷ்; நஷ்ட ஈடாக பத்து கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நயன் - விக்கிக்கு வக்கீல் நோட்டீஸை அனுப்பினார். இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷை பயங்கரமாக விமர்சித்து மூன்று பக்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அந்தக் கடிதத்தில் எந்தவிதமான நியாயமும் இல்லை; நயன் மீதுதான் முழு தவறும் என்று அவருக்கு எதிர் நிலைப்பாட்டினை பலரும் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு தொடர்ந்த தனுஷ்: அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 37 நொடிகள்வரை அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜ் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மேலும் கடுப்பான தனுஷ் நெட்ஃப்ளிக்ஸ், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்கும் தொடர்ந்தார். இதற்கிடையே இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் பக்கம் காலை போட்டு நயன் அமர்ந்திருந்ததற்கும் தனுஷின் ரசிகர்கள் கோபமடைந்தார்கள்.
நயன் போஸ்ட்:இந்தச் சூழலில்தான் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட்டை போட்டிருக்கிறார். அதில், "பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழித்தீர்கள் என்றால் அதை கடனாக எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கே ஒரு நாள் வட்டியுடன் திரும்ப வரும் என கர்மா கூறுகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தப் போஸ்ட்டின் மூலம் தனுஷைத்தான் நயன் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். இந்தப் பஞ்சாயத்து இப்போதைக்கு ஓயாதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











