பாக்ஸ் ஆபிஸ்: ஜி.வி.பிரகாஷின் "த்ரிஷா இல்லேன்னா நயன்தாராவை" வீழ்த்தியது நயனின் "மாயா"
சென்னை: நேரம் உச்சத்தில் இருக்கிறது போலும் சென்னை பாக்ஸ் ஆபிசை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து, வசூலில் தொடர்ந்து பேயாட்டம் போட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.
வெளியான முதல் வாரத்தில் ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிசில் முதலிடத்தில் இருந்தது, நயன்தாராவின் மாயா திரைப்படம் 2 வது இடத்தில் இருந்தது.
வரும் வாரங்களில் இந்த நிலை மாறலாம் நாம் ஏற்கனவே கூறியது போல 2 வது வாரத்தில் நயன்தாராவின் மாயா திரைப்படம், சென்னை பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பெற்றிருக்கிறது.

மாயா
கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான "மாயா" திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்புக் கிடைத்தது.ஆனால் பாக்ஸ் ஆபிசைப் பொறுத்தவரை மாயா படத்தின் வசூலானது ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படத்தை விட சற்று குறைவாகவே இருந்தது.

2 வது வாரத்தில் முதலிடம்
2 வது வாரத்தில் இந்நிலைமை மாறி தற்போது நடிகை நயன்தாராவின் வசம் சென்னை பாக்ஸ் ஆபிஸ் உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 2.09 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது நயன்தாரா நடிப்பில் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான மாயா திரைப்படம்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா
ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் இளைஞர்களை மட்டுமே ஈர்க்கக் கூடிய ஒரு படமாக இருந்ததால், தற்போது பாக்ஸ் ஆபிசில் சற்று ஆட்டம் கண்டிருக்கிறது. 10 நாள் முடிவில் சுமார் 1.91 கோடிகளை வசூலித்திருக்கிறது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம்.

தளராத தனி ஒருவன்
வெளிவந்து ஒரு மாதத்திற்கும் மேலானாலும் கூட தியேட்டர்களில் ரசிகர்கள் ஆதரவால் தொடர்ந்து அதிகமான காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது ஜெயம் ரவியின் "தனி ஒருவன்" திரைப்படம். கடந்த வாரத்தில் சுமார் 23.90 லட்சங்களை வசூலித்த இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 6.11 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.

குற்றம் கடிதல்
நல்ல விமர்சனங்களுடன் வெளியான பிரம்மாவின் குற்றம் கடிதல் திரைப்படம், பாக்ஸ் ஆபிசிலும் சாதனை புரிந்து வருகிறது. கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையில் வெளியான இந்தப் படம் 60 காட்சிகள் மூலம் சுமார் 9.84 லட்சங்களை வசூலித்து இருக்கிறது.

கிருமி
பெரிதும் எதிர்பர்க்கப்பட்ட கிருமி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் எடுபடவில்லை.36 காட்சிகள் திரையிடப்பட்டு 4.14 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருக்கிறது படம்.
மொத்தத்தில் சென்னை பாக்ஸ் ஆபிசை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. இன்னும் 2 தினங்களில் விஜயின் புலி திரைப்படம் வெளியாகும் போது நிலைமை ஒட்டுமொத்தமாக மாறலாம் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











