Nayanthara: ரஜினிகாந்த் யாருன்னே தெரியாது.. நயன்தாராவின் பேச்சால் ஆடிப்போன தமிழ் சினிமா
சென்னை: நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் நடிகையாக உள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அன்னப்பூரணி. அடுத்து இவரது நடிப்பில் உருவாகவுள்ள படம், ராக்காயி. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில், நயன்தாராவின் சமீபத்திய பேட்டி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நயன்தாரா, சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக தனுஷ் விவகாரம் குறித்த பேச்சில், வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன், சக்தி ஆகியோரை குரங்குகள் என விமர்சித்தது தொடங்கி, பிரபு தேவாவுடனாக காதல் விவகாரம் குறித்து பேசியது, விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததில் நான் மிகவும் குற்றவுணர்வுடன் இருக்கின்றேன் எனத் தெரிவித்ததுவரை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக விக்னேஷ் சிவன் குறித்து அவர் பேசியது, பலருக்கும் சரியெனப் பட்டது. அதாவது, நான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதால்தான், அவரது திறமையை பலரும் குறைத்து மதிப்பிடுகின்றனர். நான் அவரைத் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால், அவரது திறமைக்கும் தனித்தன்மைக்கும் உரிய மரியாதை கிடைத்திருக்கும். எங்கள் காதல் மற்றும் திருமணம் ஆகியவற்றில், நான் தான் முதலில் காலடி எடுத்துவைத்தேன். எனக்கு இப்போது அவற்றை நினைத்தால் குற்றவுணர்வாக இருக்கின்றது எனக் கூறினார். நயன்தாராவின் இந்தப் பேச்சு, விக்னேஷ் சிவன் மீது அவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

ரஜினிகாந்த்: இப்படியான நிலையில், நயன்தாரா தமிழில் தனது இரண்டாவது படமான, சந்திரமுகி படத்தில் நடித்தது குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதாவது சந்திரமுகி படத்தில் நான் நடிக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நடிகர் என்று எனக்குத் தெரியாது. எனது முதல் நாள் முதல் காட்சியே சூப்பர் ஸ்டாருடன் தான் படமாக்கப்பட்டது. அப்போது எனக்கு ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர் எனத் தெரியாது. ஒருவேளை அவர் மிகப்பெரிய நடிகர் எனத் தெரிந்திருந்தால், பயம் வந்திருக்கும். நட்சத்திர அந்தஸ்து குறித்த அறியாமை எனக்கு அந்த நேரத்தில் உதவியது" எனக் கூறியுள்ளார்.

அதிர்ச்சி: நயன்தாராவின் இந்தப் பேச்சு, சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், தமிழ் திரையுலத்தினருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால், சூப்பர் ஸ்டார் ரசிகர்களும், தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் திரையுலகினரும் நயன்தாராவை கலாய்த்து வருகின்றனர். இது தொடர்பாக இணையவாசி ஒருவர், " நயன்தாரா ஹாலிவுட் சினிமா உலகில் இருந்து வந்திருப்பதால், அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாரென்று தெரியாது" என கமெண்ட் செய்துள்ளார்.

மீம்: அதேபோல் மற்றொரு இணையவாசி, தம்பி ஒரு மனுசன் பொய் பேசலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் பேசக்கூடாது என மீம் டெம்ப்ளேட்டினை கமெண்ட்டாக ஷேர் செய்துள்ளார். மற்றொருவரோ எப்படிப்பட்ட வரிகள் என்ற மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்துள்ளார். ஒரு இணையவாசி, 'விட்டால் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டினை விலைக்கு கேட்டாலும் கேட்பார்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.நயன்தாராவின் இந்தப் பேச்சு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது என இணையவாசிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











