ஆஹா அள்ளுமே.. சாக்லேட் பாயுடன் முதல்முறை ஜோடி போடும் நயன்தாரா?
சென்னை: மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் படத்தில் மாதவன் நடிக்கவிருக்கும் சூழலில் அந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து அவர் தற்போது கோலிவுட்டின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் மட்டுமின்றி ஷாருக்கானுடன் ஹிந்தியில் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார்.

தாக்கிய விமர்சனங்கள் தாண்டிய நயன்தாரா
நயனின் சொந்த வாழ்க்கையில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளை வைத்து அவரை பலர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினர். நடிகைகளில் அதிகளவு விமர்சனத்தை சந்தித்தவர் நயன்தாராவாகத்தான் இருக்கும். அந்த அளவு அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் மீறி திறமையின் துணையோடும், தன்னம்பிக்கையோடும் இப்போது சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா
நானும் ரௌடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தபோது அவருடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. அந்தக் காதலையும் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத நயன் விக்னேஷ் சிவனை தீவிரமாக காதலித்துவந்தார். இருவரும் ஒரே வீட்டில் தங்கியும் இருந்தனர்.
இந்தச் சூழலில் கடந்த வருடம் இருவரது காதலும் திருமணத்தில் முடிந்தது. அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றனர் நயன் - விக்கி தம்பதி. அதுவும் சர்ச்சையாக,தீவிர விசாரணைக்கு பிறகு அனைத்தும் முறைப்படி நடந்திருக்கிறது என்பது உறுதியானது. இதனையடுத்த் அவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்திவருகிறார்.

மித்ரன் ஜவஹரின் புதிய படம்; கமிட்டான மாதவன்
இந்தச் சூழலில் யாரடி நீ மோகினி, குட்டி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் இயக்கப்போகும் புதிய படத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷை வைத்து மித்ரன் கடைசியாக இயக்கிய திருச்சிற்றம்பலம் வெற்றி படமாக அமைந்ததால் இந்தப் படம் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஹா மாதவனுக்கு ஜோடி நயன்தாராவா?
இந்நிலையில், மித்ரன் ஜவஹரும், மாதவனும் இணையும் படத்தில் கதாநாயகியாக நயன் தாரா நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சம்பளம் தொடர்பாக நயன் தாராவிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நயன் தாரா சினிமாவுக்கு 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் இதுவரை மாதவனுடன் சேர்ந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











