Nayanthara: நீண்ட நாளாக நிறைவேறாத ஆசையை சொன்ன நயன்தாரா.. அந்த இயக்குநர் மனசு வைப்பாரா?
சென்னை: நடிகை நயன்தாரா சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது தனது நீண்ட கால ஆசையை மனம் விட்டுக் கூறியுள்ளார்.
ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக தமிழில் நயன்தாரா 75 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்க உள்ளார்.
அட்லீக்கு எப்படி ராஜா ராணி அமைந்ததோ அதே போல ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குநரான நீலேஷ் கிருஷ்ணா நயன்தாராவை வைத்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜை நடிக்க வைக்க உள்ளார்.

விருது விழாவில் நயன்தாரா: சமீபத்தில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். த்ரிஷா, சிம்பு, மணிரத்னம், அல்லு அர்ஜுன், ஏ.ஆர். ரஹ்மான், லோகேஷ் கனகராஜ், கவின், ரிஷப் ஷெட்டி, மிருணாள் தாகூர், ராஷி கன்னா, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் அந்த விருது விழாவில் பங்கேற்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா என சிறப்பு விருதினை இயக்குநர் மணிரத்னம் கைகளால் நயன்தாராவுக்கு அந்த மேடையில் வழங்கப்பட்டது.

மணிரத்னம் காலில் விழுந்து: இயக்குநர் மணிரத்னம் கைகளால் விருது வாங்குவதற்கு முன்னதாக அவரது காலில் விழுந்து நடிகை நயன்தாரா ஆசி வாங்கியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், அந்த நிகழ்ச்சிக்கு வரும் போதே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் தனது நன்றியையும் வணக்கத்தையும் புன்னகைத்த முகத்துடன் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த அரங்கையே அதிர வைத்திருந்தார் நயன்தாரா.
நயன்தாரா காலில் விழ வந்த போதே, அதெல்லாம் வேண்டாம்மா என்பது போல விலக நினைத்த மணிரத்னம் அவர் காலில் விழுந்ததுமே ஆசிர்வாதம் செய்தார். நயன்தாராவின் திருமணத்துக்கும் ரஜினிகாந்த் உடன் மணிரத்னம் நேரில் கலந்து கொண்டு ஆசிர்வதித்தது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவின் நிறைவேறாத ஆசை: அந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம் கைகளால் விருது வாங்கி நடிகை நயன்தாரா. இந்தியாவின் பெருமைமிகு இயக்குநரான மணிரத்னம் சார் கைகளால் இந்த விருது வாங்குவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

ஆனால், எல்லா நடிகர்களுக்கும் இருப்பதை போலவே அவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து இப்படியொரு விருது வாங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஒரு சில படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை வந்தாலும், ஏதோ ஒரு சில காரணங்களால் அது நடக்காமலே போய் விட்டது மிகவும் வருத்தத்தை தருகிறது என மேடையிலேயே மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போன தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் நயன்தாரா.
கமல் மணிரத்னம் படத்தில்: ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நயன்தாரா இதுவரை கமல்ஹாசன் உடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பாரா என்கிற கேள்வியும் கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளது. கோலிவுட்டில் சமீப காலமாக பெரிய நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடிக்காமல் இருந்து வரும் நயன்தாராவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











