வைரலான அந்த பார்ட்டி வீடியோ.. பிரபல இயக்குனருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு திடீர் நோட்டீஸ்!
மும்பை: கடந்த வருடம் நடந்த பார்ட்டி தொடர்பாக விளக்குமாறு, பிரபல இயக்குனருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பரபரப்பானது பாலிவுட்.
பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை, சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியாவிடம் விசாரணை நடத்தியது.

போதைப் பொருள்
அப்போது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் நடிகை ரியா, அவர் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சாமுவேல் மிரண்டா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தீபிகா படுகோன்
இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த வருடம் கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

கரண் விளக்கம்
அதில் நடிகர்கள் ஷாகித் கபூர், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா உட்பட பல பிரபலங்கள் உள்ளனர். பார்ட்டியில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு கரண் ஜோஹர் விளக்கமளித்தார்.

பொய் செய்திகள்
கடந்த ஆண்டு என் வீட்டில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக வரும் செய்தியில் உண்மையில்லை. போதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, ஊக்குவிப்பதுமில்லை என் நிறுவனத்தை களங்கப்படுத்தவே பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கூறியிருந்தார்.

கரணுக்கு சம்மன்
இந்நிலையில், அந்த பார்ட்டி வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இயக்குனர் கரண் ஜோஹருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை. கரண் ஜோஹர் நேரில் ஆஜராக வேண்டாம் என்று கூறப்படுகிறது. அது தொடர்பாக விளக்கம் மற்றும் ஆவணங்களை அவர் சமர்பிக்க வேண்டும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











