நீளிரா படத்தை தியேட்டரில் பாருங்க.. ஓடிடியில் ரிலீஸ் இல்லை. கார்த்திக் சுப்புராஜ் பளிச்
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் ராணா டகுபதி தயாரிப்பில் உருவாகி உள்ள படமான நீளிரா படத்தை அறிமுக ஈழ இயக்குநர் சோமீதரன் இயக்கி உள்ளார். படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்திற்கு பெருமளவு ஆதரவு ரசிகர்கள் மத்தியில் கிடைக்க வேண்டும் என்று, தயாரிப்பளரான கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவரது பதிவில், " என் அன்பான தமிழ் ரசிகர்களே, நீளிரா திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்த படம், இதைக் கண்டு களித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகவும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது. சோமீதரன் என்கிற இலங்கை தமிழ் படைப்பாளியின் முதல் படமான நீளிரா, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக உருவாகியுள்ள ஈழத் தமிழ் திரைப்படம் என்பதால், இதை ஒரு மெயின்ஸ்ட்ரீம் திரையரங்கு வெளியீடாக கொண்டு வர பல சவால்களை எதிர்கொண்டோம். அந்த சவால்களை கடந்து நாங்கள் அதை சாதித்துள்ளோம். உணர்வு ரீதியாக எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி படம்.

கோடிக்கோடியாக லாபம் வரும் என்ற நோக்கத்துடன் இந்த படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை. ஈழத்து போரை சார்ந்த உண்மையான கதைகளையும். படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஒரு இடம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது ஒரு தொடக்கம். A great start for a film movement! ஆனால் இந்த தொடக்கம் வளர்ந்து, இனி வரும் காலங்களில் இதைப் போன்ற கதைகளும் படைப்பாளிகளும் சினிமாவிற்கு வர வேண்டும் என்றால், வியாபார ரீதியாக திரையரங்குகளுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
குறைந்த தியேட்டர்கள்: தொடக்கத்தில் குறைந்த திரைகளில்தான் வெளியிட்டோம். குறைந்த திரைகளே கிடைத்தது. புனித வெள்ளியில் தொடங்கி, வாய்மொழி பாராட்டு (Word of Mouth) பரவி, மேலும் பலரும் திரையரங்குகளுக்கு வந்து, ஞாயிற்றுக்கிழமை -Easter நாளில் மக்கள் ஆதரவால் எங்கள் படம் உயிர்த்தெழும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால் ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை... பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும்.
ஓடிடி இல்லை: தயவுசெய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். அது உங்கள் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயமாக மதிப்புடையதாக இருக்கும். குறிப்பு: இந்த படத்திற்கான OTT ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை. எனவே சில வாரங்களில் OTT-யில் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். சினிமாவின் உயிர்த்தெழுதல் திரையரங்குகளில்தான் நிகழும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











