Jailer Story - ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் கதை.. பீஸ்ட் மோடில் நெல்சன் திலீப்குமார்?
சென்னை: Jailer Story (ஜெயிலர் கதை) ஜெயிலர் படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். முதல் படத்திலேயே ஹீரோவை மையப்படுத்தி எடுக்காமல் ஹீரோயினை மையப்படுத்தி எடுத்ததால் பெரும் கவனம் ஈர்த்தார் அவர். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்து கோலிவுட்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது.

பீஸ்ட் நெல்சன்: முதல் இரண்டு படங்களும் ஹிட்டானதை அடுத்து மூன்றாவது படத்தை விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும் படமாக இருந்தது. ஆனால், படம் வெளியானதும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரை பயங்கரமாக ட்ரோல் செய்தனர் ரசிகர்கள். அதேசமயம் நெட்டிசன்கள் இவ்வளவு எல்லை மீறக்கூடாது என நெல்சனுக்கு ஒரு தரப்பினர் ஆதரவுக் குரலையும் எழுப்பினர்.
ஜெயிலர் இயக்கும் நெல்சன் திலீப்குமார்: பீஸ்ட் படத்தை அவர் இயக்கிக்கொண்டிருக்கும்போதே ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்துக்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்: பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெருக்கடிக்கு சென்ற நெல்சன் இப்படத்தின் மூலம் தன்னை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் 99 சதவீதம் முடிந்துவிட்ட சூழலில் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகிறது ஜெயிலர். இதுதொடர்பான அறிவிப்பை க்ளிம்ப்ஸுடன் படக்குழு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்றும் கணித்துள்ளனர்.

என்ன கதை?: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதை குறித்து ஏற்கனவே தகவல் ஒன்று வெளியானது. அதாவது ஒரே நாளில் நடக்கும் கதையாக அதை நெல்சன் உருவாக்கியிருக்கிறார் என கூறப்பட்டது. தற்போது க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையாகத்தான் இருக்கும். ஏனெனில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும், சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸிலும் ரஜினிகாந்த் ஒரே காஸ்ட்யூமைதான் போட்டிருக்கிறார் என கூறிவருகின்றனர்.
பீஸ்ட் மோடில் நெல்சன்: லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை ஒரே இரவில் நடப்பதுபோல் உருவாக்கியிருந்தார். அதற்கு திரைக்கதையும், மேக்கிங்கும் பக்கபலமாக அமைந்தன. எனவே அதேபோல் நெல்சனும் திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் அதகளம் செய்திருப்பார் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி ரஜினிக்கும் இந்தப் படம் மிக மிக முக்கியமான படம் என்பதால் நிச்சயம் தனது மேக்கிங்கில் ஒரிஜினல் பீஸ்ட் மோடில் நெல்சன் விளையாடியிருப்பார் என கூறுகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











