Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நெஞ்சம் மறப்பதில்லை 1 - வேட்டைக்காரன் எம்ஜிஆர், கர்ணன் சிவாஜி
- பெரு துளசி பழனிவேல்
அப்பொழுதெல்லாம் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்குள்ளும் கடும் போட்டா போட்டி இருந்து வந்தது. இவர்கள் இருவரின் படங்கள் வெளிவரும் போது இரண்டு நாயகர்களின் ரசிகர்களும் மோதிக்கொள்ளவார்கள்.
அப்படிப்பட்ட சூழ் நிலையல் தான் எம்.ஜி.ஆர்.நடித்த வேட்டைக்காரன் படமும், சிவாஜி நடித்த கர்ணன் படமும் ரெடியாகி கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் டைரக்டர் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய கர்ணன் படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட கலர் படம்.
இதில் முன்னணி நட்சத்திரக் கூட்டம் அதிகமாக இருந்தது. படமும் பாதியளவில் முடிந்து அடுத்தத கட்ட படப்பிடிப்பிற்கு போகும் போதுதான் எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் படத்தை தேவர் பிலிம்ஸ் சார்பில் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார். அவரது சகோதரர் எம்.ஏ. திருமுகம் படத்தை இயக்கியிருந்தார். இதில் ‘மகாதேவி', ‘பரிசு' படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சாவித்ரி நடித்திருந்தார். கருப்பு வெள்ளையில் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் வேட்டைக்காரன்.
டைரக்டர் பி.ஆர்.பந்துலு கர்ணன் படத்தின் அனைத்து கட்டப் படப்பிடிப்புகளையும் முடித்து படத்தை பொங்கலன்று (14.01.1964) வெளியிட ஏற்பாடுகளைச் செய்தார். அப்பொழுதுதான் பி.ஆர்.பந்துலுவின் நண்பர் ஒருவர் ஒரு செய்தியை வந்து சொன்னார். சிவாஜி நடித்த கர்ணன் படம் வெளியாகும் அன்றே எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படமும் வெளியாகிறது என்ற செய்திதான் அது.
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் சேர்ந்து வருவதைவிட தனித்தனியாக வந்தால் அந்தந்த படங்களுக்கு கிடைக்க வேண்டிய வசூல் கிடைக்கும். இரண்டு நடிகர்களுக்கும் நிகரான ரசிகர் பட்டாளம் உண்டு. டைரக்டர் பந்துலு தனது படக்குழுவினருடன் கலந்து பேசினார். இதுபற்றிய செய்தியை சிவாஜி அவர்களிடமும் தெரிவித்தார்கள். சிவாஜியும் யோசனையில் ஆழ்ந்தார்.
சாண்டோ சின்னப்பா தேவரை வரவழைத்து பேசினார்கள். அவரும் படம் எடுத்திருப்பது தேவர் பிலிம்ஸ் தான். ஆனால் படம் வெளியாகும் தேதியை சின்னவர் (எம்.ஜி.ஆர்) தானே முடிவு பண்ணுவார் அவரிடம் எப்படி பேசுவது, ஒருவாரம் தள்ளி படத்தை வெளியிடுங்கள் என்று. இறுதியில் படக்குழுவினர் ஒருவர் சொன்ன ஐடியாபடி சிவாஜி நடித்த கர்ணன் படத்தை எம்.ஜி.ஆருக்கு மட்டும் தனியாக போட்டு காட்டுவது. அதன்பிறகு இதுபற்றிப் பேசுவது என்று முடிவு செய்தார்கள்.
எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள். கர்ணன் படத்தைத் தங்களுக்காக பிரத்யோகமாக போட்டு காட்ட விரும்புகிறோம். அதற்கான நேரத்தை ஒதுக்கி தந்தீர்களானால் நாங்கள் படத்தை திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்கின்றோம் என்று சொன்னார்கள். எம்.ஜி.ஆரும் ஒரு குழந்தையை போல துள்ளிகுதித்து கர்ணன் படத்தைப் பார்க்கச் சம்மதித்தார். படமும் அவருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் திலகம் சிவாஜியை மனதார பாராட்டினார். அற்புதமாக நடித்திருக்கிறார். அப்படியே கர்ணனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். இவரைப்போல ஒரு சிறந்த நடிகரை எங்கேயும் பார்க்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார். படத்தின் பிரம்மாண்டத்தையும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவையும் மற்ற கலைஞர்களையும் வாயாரப் புகழ்ந்தார்.
படம் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு குழுவினரும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவும் அவரிடம் வேட்டைக்காரன் படம் கொஞ்சம் தள்ளி வெளிவந்தால் உதவிகரமாக இருக்கும் என்று அந்த நேரத்தில் பேசத் தயங்கினார்கள்.
மறுநாள் சாண்டோ சின்னப்பா தேவரை வைத்தே எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். அவரும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, 'படம் பார்த்தேன் பிரம்மாண்டமாக இருக்கிறது. நண்பர் சிவாஜியும் அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தை தைரியமாக ரிலீஸ் பண்ணச்ச சொல்லுங்க.. அதே நேரம் வேட்டைக்காரன் படமும் அந்த நேரத்தில் வெளிவந்தால்தான் நல்லது. தம்பி சிவாஜி ரசிகர்களுக்கும் படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கட்டும். எனது ரசிர்களுக்கும் படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கட்டும் மொத்தத்தில் எல்லா ரசிகர்களும் இந்த இரண்டு படத்தை பார்க்கட்டும்,' என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.
இறுதியில் இரண்டு படங்ளும் ( வேட்டைக்காரன் & கர்ணன்) 14.1.1964 அன்று வெளிவந்தன. வெளிவந்த தியேட்டர்கள் வாசலில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கர்ணன் படத்திற்கான விளம்பர பேனர் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது. சூரியபகவான் பல குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வருவதுபோல் பேனர் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது.
வேட்டைக்காரன் ரிலிசான தியோட்டர்களில் இரும்பு கூண்டு வைத்து நிஜமான ஒரு புலியை அதில் அடைத்து வைத்தார்கள். படம் பார்க்க வந்தவர்கள் அனைவரும் நிஜப் புலியைப் பார்க்க கூட்டம் கூடியது. கர்ணனுக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனால் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அளவிற்கும் படம் வெற்றி பெறவில்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் மிகுந்த வசூலை அள்ளி கொடுத்தது. பின்னாளில் எம்.ஜி.ஆர். பி.ஆர்.பந்துலுவுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதிக லாபம் பெற வைத்தார் (1965).
பின்னாளில் இதே கர்ணன் படம் மறு வெளியீடாக சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வசூலைக் குவித்தது தனிக் கதை!
-தொடரும்
கட்டுரையாசிரியர் குறிப்பு:
கட்டுரையாசிரியர் பெரு துளசி பழனிவேல் தமிழ் சினிமாவில் நீண்ட கால அனுபவமுடையவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், சினிமா மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி வருபவர்.
ஏவிஎம் நிறுவனத்தின் பிஆர்ஓவாகப் பணியில் உள்ள இவர் 'மனித நேயத்தால் மறையாத எம்ஜிஆர்', ' உயர்ந்த மனிதன் சிவாஜி பயோடேட்டா', தமிழ் சினிமாவின் முதல்வர்கள், பரபரப்பூட்டிய பாலியல் படங்கள், தேசிய விருது பெற்ற படங்கள், 'தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த தமிழ்ப் படங்கள்', 'சுட்ட படங்கள்', பிரச்சினைகளைச் சந்தித்த படங்கள் என பல நூல்களை எழுதியுள்ளார். அண்மையில் இவர் எழுதியது திரையில் மிரட்டிய திகில் படங்கள்.
முன்னணி நாளிதழ்கள், வார இதழ்களில் இவரது கட்டுரைத் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சம்பவங்கள், மறக்க முடியாத நடிகர் நடிகைகள் தொடர்பான நிகழ்வுகளை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்தத் தொடர் அமைய வேண்டும் என விரும்பி பெரு துளசி பழனிவேல் வைத்துள்ள தலைப்புதான் நெஞ்சம் மறப்பதில்லை!
வாரம் இரு கட்டுரைகள் இத்தொடரில் இடம் பெற உள்ளன. தொடரின் முதல் கட்டுரை சனிக்கிழமை தொடங்குகிறது. பிறகு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் வெளியாகும். படித்து மகிழுங்கள்.