நேர்முகம்... கேரளா காட்டுக்குள் காணாமல் போகும் ஏழு ஜோடிகளின் சஸ்பென்ஸ் த்ரில்லர்!
ஹைடெக் தயாரிப்பில் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் ரஃபி- மீனாட்சி நடிக்கும் நேர் முகம்.
கேரளாவின் அடர்த்தியான காட்டுக்குள் செல்லும் ஏழு ஜோடிகள் மீண்டும் திரும்பினார்களா என்பதை வெகு விறுவிறுப்பாகவும், த்ரில்லரையும் கலந்து கட்டி சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் முரளி கிருஷ்ணா.

‘மிரண்டவன்' படத்தை அடுத்து முரளிகிருஷ்ணா இயக்கும் படம் இது. ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கருப்பசாமி குத்தகைதாரர்', ‘அகம் புறம்' ஆகிய படங்களின் நாயகி மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹைடெக் பிக்சர்ஸ் சார்பாக ரஃபி தயாரிக்கிறார். நேர்முகத்தில் ஏழு ஜோடிகள் காட்டுக்குள் படும் பாட்டை வித்தியாசமான முறையில் படமாக்கியுள்ளார். படத்தில் பாண்டியராஜன், ஜின்னா, சிசர் மனோகர், நெல்லை சிவா மற்றும் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் முரளி கிருஷ்ணா கூறுகையில், "எப்போதுமே எனது படங்களில் மனப் பிரச்சினைகளை மையப்படுத்தி கதை பயணப்படும்.
‘நேர்முகம்' படத்திலும் மனிதர்களுக்குள்ளேயும் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களையும் அலசிவிட்டு தீர்வுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்பவர்கள் எவ்வகையான முடிவுக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்பதை காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்ஷன், கிளாமர் கலந்து மகா கமர்சியல் கலவையாக வடிவமைத்துள்ளேன்.
இளைஞர்களையும், காதலர்களையும் டார்கெட் வைத்து உருவாக்கப்படும் இப்படம் குடும்பங்களையும் சுண்டி இழுக்கும் மெசேஜுடன் கிளைமாக்ஸைத் தொடும். இசைக்கு என் படங்களில் எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். இப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதி நானே இசையமைத்துள்ளேன். துள்ளும் இசையைக் கேட்கலாம். படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.
'நேர்முகம்' படத்தின் ஒளிப்பதிவை ஜெகதீஷ் வி. விஸ்வம் கவனிக்க, எடிட்டிங்கை வில்சியும், தயாரிப்பு நிர்வாகத்தை தேனி எஸ் முருகன் கவனிக்க படம் சென்னையில் தொடங்கி, கேரளா, கோவா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் வளர இருக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











