ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4 தொடரில் நெட்ஃபிலிக்ஸ் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: கடந்த செவ்வாய்க்கிழமை டெக்சாசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு, தங்களது புதிய தொடரில் நெட்ஃபிலிக்ஸ் நிர்வாகம் அதிரடி முடிவெடுத்திருக்கிறது.
உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீசன் 4' தொடரில், 'குழந்தைகள் சம்பந்தப்பட்ட கிராபிக் வன்முறைக் காட்சிகள் உள்ளன' என டைட்டில் கார்டில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
என்றாலும், இந்த பொறுப்புத் துறப்பு அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே மற்ற நாடுகளில் பார்ப்பவர்களுக்கு இல்லை.

டெக்சாஸ் சம்பவம்
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 பெரியவர்களும் பலியாகினர். இச்சம்பவம் அமெரிக்காவை உலுக்கியது. இச்சம்பவத்தையடுத்து தற்போது நெட்ஃபிலிக்ஸ், ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீசன் 4 தொடருக்கு முன் டைட்டில் கார்டில் அதிரடியாக பொறுப்புத் துறப்பு எச்சரிக்கை அறிக்கையை சேர்த்திருக்கிறது. 'குழந்தைகள் சம்பந்தப்பட்ட கிராபிக் வன்முறை காட்சிகள்' உள்ளன என்ற வாசகத்தைச் சேர்த்திருக்கிறது. மேலும், 'ஓராண்டுக்கு முன் இத்தொடரை நாங்கள் படம்பிடித்தோம்' என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், டெக்சாசில் இறந்த குழந்தைகளுக்காக தங்களது வருத்தத்தையும் நெட்ஃபிலிக்ஸ் நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீசன்
ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் என்ற தொடர் குழந்தைகளை மையப்படுத்தி நெட்ஃபிலிக்ஸ்சில் வெளியாகும் ஓர் அறிவியல் புனைக் கதை தொடர். உலகளவில் குழந்தைகளை மிகவும் ஈர்த்த இந்தத் தொடர் இதுவரை 3 சீசன்களாக வெளிவந்திருக்கிறது.

குழந்தைகளின் ஃபேவரைட்
ஒரே பள்ளியில் படித்து வரும் நான்கு நண்பர்களான வீலர், டஸ்டின் ஹெண்டர்சன், லூக்கஸ் சிங்க்ளேர் மற்றும் வில் பையர்ஸ் ஆகிய நால்வரும் வார இறுதியில் கேம் விளையாடுவார்கள். அப்போது விஞ்ஞானத்தில் ஏற்படும் தவறு ஒன்றால், வேற்றுகிரகவாசிகளின் உலகத்தின் கதவு திறந்து, வில் பையர்ஸ் ஏலியன்களால் தூக்கிச் செல்லப்படுகின்றார். பின் அவர் எப்படி மீண்டும் பூமிக்கு வருகின்றார் என்பது தான் முதல் சீசனின் கதை. இதனை அடுத்து வந்த இரண்டு சீசன்களும் இதே போல் அறிவியல் சார்ந்த அமானுஷ்யங்களை மையப்படுத்தி விறுவிறுப்பான தொடராக உருவாக்கப்பட்டிருந்தது.

சீசன் 4-க்கு எகிறிய எதிர்பார்ப்பு
2016-ல் முதல் சீசனோடு தொடங்கிய இந்த தொடர், பின்னர் 2017 இரண்டாவது சீசனும், 2019-ல் மூன்றாவது சீசனுமாக வெளிவந்தது. இந்த மூன்று சீசன்களில் இத்தொடருக்கு விசிறிகளாக மாறிப்போன குழந்தைகள், சீசன் 4-க்காக மிகுந்த ஆவலோடு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இதனால் சீசன் 4-க்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இன்று மே 27 முதல் நெட்ஃபிலிக்சில் இத்தொடர் ஒளியேறவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











