ஒரு மனிதரின் அன்புக்காக! - ரஜினி ரசிகர்கள் பற்றி நெதர்லாந்து பெண் உருவாக்கும் ஆவணப் படம்
ரஜினி தன் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பை, ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் வெறித்தனமான பாசத்தை எடுத்துக் காட்டும் விதமாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்குகிறார் நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் தயாரிப்பாளர். அவர் பெயர் ரிங்கு கால்சி.
ஒரு மனிதரின் அன்புக்காக என்ற தலைப்பில் படமாகும் அந்த ஆவணப் படத்தை, இன்று நேற்றல்ல.. சுமார் நான்கு ஆண்டுகளாகவே எடுத்து வருகிறார் கால்சி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தமிழ்நாட்டு ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு, அவர் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் காட்டும் இணையற்ற ஈடுபாடு, அவர் உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டு சிகிச்சைக்கு சென்றபோது, அவர்கள் தவித்த தவிப்பு, மேற்கொண்ட பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், செருப்பு கூட அணியாமல் கொளுத்தும் வெயில் பல மைல் தூரம் மேற்கொண்ட பாத யாத்திரை, முழங்காலில் மலைப் படி ஏறி நேர்ந்து கொண்டது போன்றவற்றை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.
இதற்காக, தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களின் உணர்வுகளை சுமார் 4 ஆண்டுகாலமாக நெருக்கத்தில் இருந்து பார்த்த கால்சி, கடைசியில் தானும் தீவிர ரஜினி ரசிகையாகிவிட்டதுதான் சுவாரஸ்யம்.
பல முறை ரஜினியை விழாக்களில் ரஜினியை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை எனும் கால்சி, அந்த தருணத்துக்காக காத்திருக்கிறார். அப்போது ரஜினிக்கு இந்தப் படத்தைக் காட்டி சமர்ப்பணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
தான் உருவாக்கும் ஒரு மனிதரின் அன்புக்காக படத்தை 2015- பிப்ரவரியில் உலகளாவிய அளவில் திரையிடத் திட்டமிட்டுள்ளார் கால்சி.


Click it and Unblock the Notifications











