விஜயகாந்த் பக்குவமெல்லாம் விஷாலுக்கு வருமா?.. பாக்யராஜ் இறுதி ஊர்வலத்தை வைத்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மறைவையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி அஞ்சலியில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், நடிகர் சங்க நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விவாதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்யராஜ் போன்ற மூத்த கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில், முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவுகூரப்பட்டு வருகிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தபோது, படப்பிடிப்பில் இருந்த விஜயகாந்த் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு, இறுதி ஊர்வலம் முடியும் வரை அருகிலிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். ரசிகர்களை கட்டுப்படுத்த வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கிய அவரது வீடியோக்கள் இன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பாக்யராஜுக்கு அருகில் இருந்த சரத்குமார்: தமிழ் சினிமாவுக்காக ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உழைத்த பாக்யராஜின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட தருணம் முதல் இறுதி ஊர்வலம் வரை, நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் தொடர்ந்து அங்கிருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ், சரத்குமாரை எதிர்த்து போட்டியிட்டிருந்தாலும், அந்த அரசியல் மற்றும் தேர்தல் கசப்புகளை மறந்து இறுதி வரை மரியாதை செலுத்தியதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விஷாலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்: இதற்கிடையில், சமூக வலைதளங்களில் சிலர் நடிகர் சங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, "நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக நின்ற பாக்யராஜ் போன்ற மூத்த கலைஞருக்கு, இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டாமா?" என்ற கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும், "நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டபோது விஷாலுக்கு ஆதரவாக நின்றோம். ஆனால் இன்று பாக்யராஜுக்கு இறுதி வரை அருகில் இருந்தது சரத்குமாரும் ராதிகாவும்தான்" என்ற பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் போல பக்குவம் வருமா?: இதைத்தொடர்ந்து, "மூத்த கலைஞர்களை வழியனுப்புவதில் விஜயகாந்த் காட்டிய பக்குவம் இன்றைய தலைமுறை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் வருமா?" என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், ஒரு நிகழ்வில் யார் எவ்வளவு நேரம் இருந்தார்கள் என்பதை வைத்து ஒருவரின் மரியாதையை அளவிட முடியாது என்றும், முழுமையான தகவல்கள் இல்லாமல் விமர்சிப்பது சரியல்ல என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications