இப்படியா காப்பியடிப்பது: ஒரு நியாயம் வேண்டாமா விஷால்?, ஆமா அந்த ஸ்டாலின் அங்கிள்...
சென்னை: தன்னுடைய 42வது பிறந்தநாள் அன்று மக்கள் நல இயக்கத்தை துவங்கி கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகர் விஷால்.
எங்கு தேர்தல் நடந்தாலும் போட்டியிடுவார் என்ற பெயர் எடுத்துள்ளார் விஷால். இந்நிலையில் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரத் துடித்த அவர் தனது 42வது பிறந்தநாளான இன்று மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை துவங்கி கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரை காப்பியடித்து பெயர் வைத்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் விஷால் பற்றி தான் பேச்சாக உள்ளது.

திருப்பரங்குன்றம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து அவமானப்பட்டதை விஷால் மறந்துவிட முடிவு செய்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஐடியாவில் உள்ளார். பெரும் தலைகள் குறி வைத்துள்ள திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா என்ற ஆய்வை அவர் ஏற்கனவே துவங்கிவிட்டார்.

கிண்டல்
திருப்பரங்குன்றம் தேர்தலை மனதில் வைத்து தான் விஷால் மக்கள் நல இயக்கத்தை துவங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் பெயரை சுட்டுவிட்டதாக நெட்டிசன்கள் அவரை கலாய்க்கிறார்கள். யார் கலாய்த்தால் என்ன என்று தன் குறிக்கோளில் குறியாக உள்ளார் விஷால்.
விஜய்
விஜய் பட தலைப்புகளை தான் காப்பியடித்தீர்கள் என்றால் மக்கள் இயக்கத்தின் பெயரையுமா விஷால். ஒரு நியாயம் வேண்டாமா என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள். அட சும்மா இருங்கப்பா, அவர் இந்த பெயரை தேர்வு செய்ததற்கு ஏதாவது பயங்கரமான விளக்கம் வைத்திருப்பார்.
வாழ்த்து
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அங்கிளுக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு விஷால் அரசியலுக்கு வந்துள்ளார். இந்த வாழ்த்துக்கு பின்னால் ஏதாவது திட்டம் இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. பாஸ், அவர் மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே அரசியலுக்கு வருகிறாராம். அவருக்கு சொந்தமாக வீடு, வாசல் இல்லையாம். இருப்பது எல்லாம் ரசிகர்களாகிய நாம் தானாம். அதனால் தான் கொடியில் `அணி சேர்வோம், அன்பை விதைப்போம்' என்ற வாசகத்தை வைத்துள்ளாராம். வாசகத்திற்கே இப்படி பலே விளக்கம் வைத்திருக்கும் அவர் அமைப்பின் பெயருக்கும் ஒரு விளக்கம் சொல்வார் மக்களே.

மசாலா
படத்தில் பேசுவது போன்று சூப்பராக பன்ச் வசனம் எல்லாம் பேசியிருக்கிறார் விஷால். நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் என்று புது விளக்கம் எல்லாம் அளித்திருக்கிறார். அரசியல் என்பது மக்கள் பிரச்சனையை தீர்க்கவே என்று செமயாக கூறியுள்ளார். இனி தமிழக அரசியலில் மசாலாவுக்கு குறைவிருக்காது என்று நம்புவோமாக.


Click it and Unblock the Notifications











