அப்படி பேசியவர்தானே ரஜினி.. ஹேமா கமிட்டி விவகாரத்தில் வேற எப்படி பதில் சொல்வார்? குவியும் கண்டனம்
சென்னை: தமிழ் சினிமாவில் எல்லோராலும் மதிக்கப்படும் நட்சத்திரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) என்றைக்கும் இருக்கின்றார். வரும் அக்டோபர் 10ஆம் தேதி அவரது நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகவுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஏற்கனவே சூர்யாவின் கங்குவா படம் அதே தேதியில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் வேட்டையன் படமும் கங்குவா படத்துடன் ரிலீஸ் ஆகவுள்ளது என அறிவிப்பு வந்தது. அதன் பின்னர் சூர்யா, " நான் பிறக்கும்போது சூப்பர் ஸ்டார் நடிகர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கின்றார். அவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும் எனக் கூறி, கங்குவா படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்தனர். சூர்யாவின் இந்த செயல் என்பது சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கப்படுகின்றது என்பதற்கு அண்மையில் நடந்த சான்று.
இவ்வளவு மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய இடத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார், ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடைபெறும் பாலியல் தொல்லைகள், வாய்ப்பு வழங்குகின்றேன் எனக் கூறி நடிகைகளை தங்களது பாலியல் இச்சைக்கு இணங்க வைப்பது, மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி (Hema Committee) விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தது.

இந்த அறிக்கையின் எதிரொலியாக, ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் அவராகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மேலும் பரபரப்பை கிளப்பியது. மலையாள இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், இடைவேல பாபு உள்ளிட்ட பலர் மீது நேரடியாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல நடிகைகள் நேரடியாகவே ஊடகங்களுக்கு தானாக முன்வந்து தங்களுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்.
தலைப்புச் செய்தி: இவையெல்லாம் பார்ப்போரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக்குகின்றது. இப்படி ஒட்டுமொத்த இந்தியாவுமே உன்னிப்பாக கவனித்துவரும் இந்த விவகாரம், இன்றைக்கும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பாளர்கள் தொடங்கி நடிகர்கள் வரை பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, யாருமே நேரடியாக பதில் அளிக்கவில்லை.

தெரியாது: இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதற்கு, அவர் ஒரே அடியாக தெரியாது எனக் கூறிவிட்டார். இவரது இந்த பதில் மக்களை மட்டும் இல்லாமல் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், இந்திய சினிமா முழுவதும் அறிந்த நபர், சூப்பர் ஸ்டார். மூத்த நடிகர், உச்ச நடிகர் என அறியப்படும் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே கவனிக்கும் இடத்தில் இருந்துகொண்டு இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பதில் கூறியது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விமர்சனம்: சூப்பர் ஸ்டாரின் இந்த பதிலுக்கு சமூக வலைதளத்தில் பலரும் பலவிதமாக தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ரஜினிகாந்த்தின் பதிலை மைய்யப்படுத்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார். ஆனால் இவர் மட்டும் இல்லாமல், சமூக வலைதளங்களில் இருக்கும் பலரும், பலவிதமான கேள்விகளை ரஜினிகாந்த்தை நோக்கி முன் வைக்கின்றனர். குறிப்பாக, அண்மையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசியபோது கூட, "விமர்சனம் செய்யுங்கள், ஆனால் மனதை நோகடிக்காதீர்கள்" எனக் குறிப்பிட்டு பேசினார்.

விமர்சனத்திற்கு பதில்: அதேபோல் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, நடிகர் விஜய்யை நான் போட்டியாக கருதவில்லை. நான் பார்க்க வளர்ந்த பையன் விஜய் என பேசினார். இப்படியான பேச்சுக்களும், மனதை நோகடிக்கும் விமர்சனங்களும் இணையதளத்திலும், சமூக வலைதளத்திலும் உலா வருபவை. சமூக வலைதளங்களில் தனது உண்மையான பெயரைக் கூட சொல்ல தைரியமில்லாமல், பலர் ரஜினிகாந்த்தை விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலரோ, தங்களை விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது விஜய் ரசிகர்களுடன் சூர்யா ரசிகர்களும் இணைந்து விட்டனர்.
அப்படி பேசியவர்தானே: தன்னை சமூகவலைதளங்களில் விமர்சிக்கின்றவர்களுக்கு பதில் கொடுக்கும் ரஜினிகாந்த், தான் சார்ந்த துறையில், ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்த கேள்விக்கு, தெரியாது என பதில் அளிக்கின்றார். ரஜினிகாந்த்தின் இந்த பதிலைக் கேட்ட பலர், தனது துறை சார்ந்த பிரச்னை குறித்து கேட்டாலே தெரியாது என பதில் அளிக்கின்றாரே, அதுவும் தலைப்புச் செய்தியாக வரும் மிகப்பெரிய விவகாரத்திற்கு இவரது பதில் அதிருப்தி அளிப்பதாக பலர் கூறுகின்றனர். இவர் மட்டும் கட்சி ஆரம்பித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் எனவும், கட்சி ஆரம்பிக்கின்றேன் எனக் கூறியபோது, நீங்கள் தொடங்கப்போகும் கட்சியின் கொள்கை என்ன என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதை குறிப்பிட்டு பேசுகையில், " கொள்கைகளா? அப்படினா.. எனக்கு தலையே சுத்திடுச்சு" என்றவர்தானே இந்த ரஜினிகாந்த், ஹேமா கமிட்டி விவகாரத்தில் இவரிடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்கமுடியும் எனவும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











