அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் ரஜினி...வாக்களிக்க வராதவர்...சமூக வலைதளங்களில் எழும் விமர்சனம்
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியன் இல்ல திருமண விழா இன்று காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் சோஷியல் மீடியாவிலும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள்
மணமக்கள் சுஷ்மிதா MBA - மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

அரசியல் பிரமுகர்கள்
தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வானதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் சென்று வாழ்த்தினர்.

ஓட்டளிக்க மட்டும் நேரமில்லையா
அன்புச்செழியன் இல்ல திருமண விழாவில் ரஜினி கலந்து கொண்டார். இதன் வீடியோ மற்றும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ரஜினிக்கு ஓட்டளிக்க மட்டும் நேரமில்லை. ஆனால் சினிமா பைனான்சியர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள மட்டும் நேரமிருக்கிறதா என விமர்சித்து வருகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ, அது அவரது இஷ்டம். உங்களுக்கெல்லாம் அதில் என்ன கஷ்டம் என பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓட்டு போட வராத ரஜினி
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க ரஜினி வரவில்லை. ரஜினி ஓட்டளிக்க வருவார் என காலை முதலே ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என போயஸ் கார்டன் முதல் ஓட்டுச்சாவடி வரை காத்து கிடந்தனர். ஆனால் கடைசி வரை ரஜினி வரவேயில்லை. ரஜினி ஊரில் இருந்தும் ஓட்டளிக்க வராதது பற்றி அப்போதே சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அரசியலை கைவிட்ட ரஜினி
அரசியல் இயக்கம் தொடங்கி முதல்வராக பொறுப்பேற்பேன் என்று பேசி பின்நாளில் அரசியலில் பங்கேற்கும் முடிவை கைவிட்டார் ரஜினி. அவர் இதுவரை வாக்களிக்காமல் இருந்தது இல்லை. ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிப்பதில் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய லட்சக்கணக்கான ரசிகர்களை மக்கள் விரும்பும் பிரபலங்கள் பின் பற்றாதது குறித்து பலரும் வருத்தத்தை பதிவிட்டனர்.

ரஜினி மட்டுமா வரவில்லை
இந்நிலையில் இன்று ரஜினி மட்டுமல்ல. அவரை போல் வாக்களிக்காமல் இருந்த பலரும் அன்புச் செழியன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டனர். அதில் உச்ச நடிகரான ரஜினியும் ஒருவர் எனும் போது ஆங்காங்கே விமர்சனம் எழுந்து வருகிறது. ஓட்டு போட வராமல் அன்புச் செழியன் இல்ல திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இடைவெளியில் வந்து கலந்து கொண்ட பிரபலங்களை தேடி பிடித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











