'நல்ல படம் எடுப்பேன்னு வாய்ல வரவே மாட்டேங்குதே..' இரண்டாம் குத்து இயக்குனரை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கடுமையாக விளாசி வருகின்றனர்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் அடுத்த பாகமாக, இரண்டாம் குத்து படம் உருவாகி இருக்கிறது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆபாசமாக இருந்ததால் ரசிகர்கள் அந்தப் படத்தின் இயக்குனரை கடுமையாக விளாசினர்.

வாழைப்பழங்கள்
அந்தப் படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரே அதில் ஹீரோவாக நடித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தோஷும், டேனியலும் வாழைப்பழங்களை வைத்துக்கொண்டு கொடுத்த போஸ், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இதற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆபாச வசனங்கள்
இந்நிலையில் இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ஆபாச வசனங்களும் அருவெறுப்பான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. கடைசியில் ஆணுறுப்பையும் காட்டியுள்ளனர். இதனால் கொதித்த ரசிகர்கள், பிட்டு படத்தையே எடுத்துள்ளதாகக் கூறி சந்தோஷ் ஜெயகுமாரை கடுமையாக விளாசித் தள்ளினர்.

பார்க்கவே கூசினேன்
இந்நிலையில் இதற்கு இயக்குனர் பாரதிராஜாவும் ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?

கிடுக்கிப்பிடி
இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள். எத்தனை கற்பழிப்புகள்? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்று கூறியிருந்தார்.

இப்போ கூசிருச்சோ?
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் பதில் தெரிவித்தார். கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான டிக் டிக் டிக் பட ஸ்டில்லை பதிவிட்டு, 'இந்தப் படத்தை பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

வருத்தம் தெரிவிக்கிறேன்
இதற்கு பலர் பாரதிராஜாவை எப்படி கேள்வி கேட்கலாம் என்று சந்தோஷை சாடியிருந்தனர். இதையடுத்து, அதற்கு வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்தார். அதில், அவசரத்தில் என்ன செய்கிறோம்? என்று தெரியாமல் பாரதிராஜாவை விமர்சித்து விட்டேன். நான் போட்ட பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

வக்கிரத்தை தூண்டுகிறது
இதையடுத்து நெட்டிசன்ஸ் சந்தோஷ் ஜெயகுமாரை தாறுமாறாக விளாசி வருகின்றனர். ஒருவர், கதைக்கு தேவையெனில் நிர்வாண காட்சி கூட வைக்கலாம் ஆனால் அது ஆபாசத்தை வக்கிரத்தை தூண்டுவதாக இருக்கக் கூடாது. ஆனால் நீங்கள் எடுத்திருப்பது பெண்களை போக பொருளாக சித்தரிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

கடைசி வரைக்கும்
இன்னொருவர், கடைசி வரைக்கும் ஒரு நல்ல படம் எடுப்பேன்னு வாய்ல வர மாட்டேங்குது என்று கேட்டுள்ளார். ஒரு சிலர் சந்தோஷ் ஜெயகுமாருக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்னொரும் உங்க ஆபாச படத்தோட டிக் டிக் டிக் படத்தை கம்பேர் பண்ணாதீங்க என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











